ஞாயிறு கொண்டாட்டம்

அமானுஷ்ய கொலைகளின் பின்னணி!

அமானுஷ்ய கொலைகள்: பெண்களின் மர்ம மரணம்

அசோக்

ஆண்மையும் பெண்மையும் உருவங்கள் மட்டுமே இல்லை. அதில் அவ்வளவு உணர்வுகள் உண்டு. ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல், ஒருவருக்குள் ஒருவர் தேடாமல், அடைய வேண்டும் என்று நினைக்கிற போதுதான் அசிங்கமாகி விடுகிறோம். பெரும்பாலான ஆண்கள் அசிங்கமாக நிற்பதற்கு, பெண்மையை அடைந்து விட வேண்டும் என நினைப்பதுதான் காரணம்.

ஒருவரின் வலியை இன்னொருவர் புரிந்துக் கொள்ளும் போதுதான் வாழ்க்கை அழகாக மாறுகிறது. ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தில் தேடும் போதும், தொலைக்கும் போதும்தான் நாம மனுஷங்களா ஆகிறோம் என்பது நம்பிக்கை. பேச்சில் ஈர்க்கிறார் இயக்குநர் ஆதிராஜன். "சிலந்தி', "நினைவெல்லாம் நீயாடா' உள்ளிட்ட படங்களில் ஈர்த்தவர். இப்போது "தீராப் பகை' கதையோடு வருகிறார்.

தீராப் பகை.... என்ன கதை....

சென்னை, பெங்களூரு, கோவை, என பல இடங்களில் ஒரே மாதிரியான முறையில் இளம்பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இது கொலையா, தற்கொலையா அல்லது அமானுஷ்ய விஷயமா என்ற முடிவுக்கு வர முடியாமல் திணறுகிறது காவல் துறை. விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், அதிர்ச்சியூட்டும் மர்மம் அவிழ்கிறது.

அதீத சுதந்திரத்தாலும் நாகரீக மோகத்தாலும் பெண்கள் சிக்கலில் மாட்டுவதைக் கருவாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய சினிமா மிகவும் துணிச்சலாகப் பேச வேண்டிய விஷயம் இது. எந்த இமேஜூக்குள்ளும் நின்று பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதனால்தான் ஒரு கை பார்ப்போம் என இறங்கி வந்து விட்டேன். ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்துக்கு பொறுப்பாகி விடுகிறோம். பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டன.

இன்னும் சில காலங்களில் பண்பாடு, கலாசாரங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கப் போகிறோம். பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்துக் கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம். இதனால் சொல்ல முடியாத தவிப்பில் இருக்கிறார்கள் பெண்கள்.

சிக்னலில் கார் துடைத்து விடும் சிறுமிக்குப் பின்னால் எத்தனை ஒரு ரணம் இருக்கும். நள்ளிரவில் பைக் மறிக்கும் விலை மாதுவுக்குப் பின் ஒரு ரம்மியமான காதல் இருந்திருக்குமோ. வறுமை, ஆதிக்க சக்திகளின் பண பலம் என நிறைய விஷயங்கள் இதன் பின்னணியில் உண்டு. இந்தியாவின் வல்லரசு கனவு... சந்திரனுக்கு விண்கலம் என பெருமைகளை பேசிக் கொண்டிருக்கிற நாம், இன்னொரு

பக்கம் ரணங்களை உள்நோக்கி பார்ப்பதில்லை.

அப்படி ஒரு பார்வை இது முன் வைக்கும். பெண் கொடுமைகளுக்கு எதிரான தீர்க்கமான ஒரு அரசியல் பார்வையும் இருக்கிறது.

பேச வேண்டிய விஷயம்தான்... வேறு என்ன எதிர்பார்க்கலாம்...

தில்லியில் தன் நண்பனோடு கைகோத்துப் போன மருத்துவ பெண் அப்படி ஒரு மூர்க்கமான சூறையாடலுக்கு ஆளாவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். ரத்தமும் துடிப்புமாக அல்லாடிய அந்தப் பெண் மனதில் எத்தனை கேள்விகள் ஓடியிருக்கும்?

அந்த கணத்தை எப்படி கடந்து வந்திருப்பாள் அந்த பெண். நினைத்துப் பார்க்கவே அப்படி ஒரு கூச்சம். ஆணாகப் பிறந்த அத்தனை பேருமே கூனிக்குறுக வேண்டிய சம்பவம் இல்லையா அது? ஆனால், அதற்குக் கூட பெண்களின் உடைதான் காரணம், நடைதான் காரணம் என்று உள்ளர்த்தம் கற்பிக்கிறது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

தலைநகரில் நடந்த கொடூரம் தடம் தெரியாத குக் கிராமங்களிலும் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதைக் கண்டும் காணாமலும் நாம் கடந்துக் கொண்டுதான் இருக்கிறோம். பெண்களைக் காட்டிலும் ஆண்களை மனதாலும், உடலாலும் வலிமையாய் படைத்தது யாரையும் பலாத்காரப்படுத்த இல்லை...

பத்திரமாய் பாதுகாப்பதற்கு. சாகப்போகிற கடைசி நிமிஷத்துல கூட, மனசுக்கு பிடித்தவனின் மடியில் தலை சாய்க்க நினைக்கிறவர்கள் பெண்கள். அவர்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தி தராத இந்த சமூகத்தின் மீதான அதிரடி பாய்ச்சலாக இருக்கும்.

விஜயராகவேந்த்ரா, ஹரிப்பிரியா என கன்னட முகங்கள் தெரிகின்றன...

எல்லாம் திட்டமிட்டதுதான். கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமாரின் மைத்துனர்தான் இந்த விஜயராகவேந்த்ரா. அவரைத்தான் இதில் ஹீரோ. தேசிய விருது பெற்ற இவர் சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தன் நடிப்பாலும் கவர்ச்சியாலும் தென்னிந்திய ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த ஹரிப்ரியா நாயகி. நடிப்பிலும் கவர்ச்சியிலும் மிரட்டியிருக்கிறார் ஹரிப்ரியா. பிரம்மாண்டமான செட்டில் படமாக்கப்பட்டுள்ள பாடலுக்கு பிரபல நடிகை மேக்னா நாயுடுவை கொண்டு வந்திருக்கிறேன்.

இவர்களுடன் ஐஸ்வர்யா ஷிந்தோகி, விஷால் ஹெக்டே, ரங்கா, ரஞ்சன் குமார், ஆத்ரிகா ரமேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ராஜேஷ் கே நாராயண் மாறுபட்ட கோணங்களில் மிரட்டியிருக்கிறார். "சிலந்தி' மற்றும் சில தெலுங்கு, கன்னடப் படங்களுக்கு இசையமைத்த எம்.ஜி. கார்த்திக் மீண்டும் இணைந்து பின்னணி இசையமைப்பிலும் பாடல்களிலும் மேஜிக்கை உருவாக்கியுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் "கேஜிஎஃப்' புகழ் எடிட்டர் ஸ்ரீகாந்த் கவுடா இந்த படத்திற்கு எடிட்டிங் செய்திருக்கிறார். ராதிகா மற்றும் கலைகுமார் நடனக் காட்சிகளை அமைக்க, மாஸ் மாதா ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். மோகன்லாலின் "மரைக்காயர்', இப்போது வந்திருக்கிற கல்கி உட்பட பல பிரம்மாண்டமான படங்களுக்கு சவுண்ட் மிக்ஸிங் செய்த எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன் இந்தப் படத்தில் பணி புரிந்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

SCROLL FOR NEXT