ஆறு வயதில் 205-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார் சிறுவன் கேப்ரியோ அக்னி.
சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த கே. பாலு- ஜாஸ்மின் தம்பதியின் மகன் கேப்ரியோ அக்னி, 'ஹோலி ஃபேமிலி' பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுவனின் தனித் திறமைகள் குறித்து கே.பாலுவிடம் கேட்டபோது, அவர் கூறியது:
'மூன்று வயது முதலே சின்னஞ்சிறுப் பொருள்களை வரையத் தொடங்கினார் எனது மகன் கேப்ரியோ அக்னி. இவரது ஆர்வத்தைக் கண்டு, 'ஓவியங்களை வரைவது எப்படி?' என்பது குறித்து செல்போனில் காணொளிகளைக் காண்பித்து உற்சாகப்படுத்தினோம்.
எந்தப் படத்தை பார்த்தாலும் அதை அப்படியே வரைந்து விட வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. புதிய ஓவிய முறைகளை வரைவதற்கு கேப்ரியோவுக்கு உந்துதலாக மாறியது.
புதியவற்றைக் கற்றுகொள்வதில் தீராத ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளி அளவிலான ஓவியப் போட்டிகளில் முதலில் பங்கேற்றவர், பிற இடங்களிலும் பங்கேற்று பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்றுவருகிறார்.
வேல்ஸ் குளோபல் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் அண்மையில் பங்கேற்று, பத்தாயிரம் ரூபாய் பரிசை வென்றார் கேப்ரியோ அக்னி.
அறம் அறக்கட்டளை விருது, அப்துல் கலாம் அறக்கட்டளை விருதுகளையும், ஐம்பதுக்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், 15-க்கும் மேற்பட்ட சாதனைப் புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளார்.
கடந்த மே மாதத்தில் நடைபெற்ற மூன்று நாள்கள் ஓவியம் வரையும் சாதனை முயற்சியில் கேப்ரியோ அக்னி ஈடுபட்டிருந்தபோது, நாள் முழுக்க பெயிண்ட் வாசத்தில் நின்றிருந்ததால் இரண்டாம்நாள் காய்ச்சல் வர போட்டியை விட்டு வெளியேறி விடலாம் என முடிவு செய்தோம். பின்னர், மருத்துவமனையில் சென்று அனுமதித்தோம். ஆனால் மூன்றாம் நாள், 'இன்று போட்டியில் நான் கலந்து கொள்கிறேன்' என்ற தன்னம்பிக்கையோடு கலந்து கொண்டு சவாலை சாதனையாக மாற்றினார்.
தற்போது ஓவிய வகுப்பில் சேர்த்திருக்கிறார். சிறுவயதிலேயே சிறார்களின் ஆர்வத்தைக் கண்டறிந்து, சாதனைகள் புரிய பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்'' என்கிறார் பாலு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.