15 வருட இடைவெளிக்குப் பின் பாவனா
நடிகை பாவனா, 15 வருட இடைவெளிக்குப் பிறகு "தி டோர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு திரும்பியிருக்கிறார். "சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பாவனா அடுத்தடுத்து "வெயில்', "ஜெயம் கொண்டான்', "தீபாவளி' போன்ற படங்களில் நடித்து நம் மனதுக்கு பிடித்தவரானார். கடைசியாக அஜித்துடன் "அசல்' படத்தில் நடித்திருந்தவர் தற்போது 15 வருட இடைவெளிக்குப் பிறகு "தி டோர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு திரும்பியிருக்கிறார்.
இப்படத்திற்காக அவரை சந்தித்துப் பேசி அவருடைய பயணத்தின் சில முக்கியமான பக்கங்களையும் புரட்டினோம். பேசத் தொடங்கிய நடிகை பாவனா, 'நான் தமிழில் "சித்திரம் பேசுதடி' படத்தின் மூலமாகதான் அறிமுகமானேன். இந்தப் படம் எனக்கு தமிழில் கிடைத்த முதல் வாய்ப்பு இல்லை. அதற்கு முன்னாடி தமிழில் இருந்து கதைகள் வந்தது. என்னுடைய தந்தை அப்போது சினிமா துறையிலதான் இருந்தாரு. அவருக்கு சினிமாவில் இருக்கிற விஷயங்களைப் பற்றி தெரியும்.
அதே சமயம், தமிழ் சினிமாவில் இருந்து எங்களுக்கு அப்போது யாரையும் தெரியாது. இது கொஞ்சம் தயக்கத்தைக் கொடுத்தது. மிஷ்கின் சார் என்னுடைய புகைப்படத்தைப் பார்த்து விட்டு கதை சொல்வதற்காக அப்போது திருவனந்தபுரம் வந்தார். "இந்தக் கதையை கேளுங்க. அப்புறம் உங்கப் பதிலை சொல்லுங்க'னு சொன்னாங்க. நானும் அப்போது அந்தக் கதையைக் கேட்டேன்.எனக்கு ரொம்பவே அந்தக் கதை பிடிச்சிருந்தது.
அந்த கேரக்டரில் நடித்தால் நல்லா இருக்கும் என்று தோன்றியது. அப்பா முதலில் வேண்டாம்னுதான் சொன்னாங்க. அதன் பிறகு "கதை நல்லாயிருக்கு, கேரக்டர் பிடிச்சிருக்கு'னு அவரிடம் சொன்னேன். அப்படிதான் நான் தமிழ் சினிமாவில் என்னுடைய முதல் படத்தில் நடித்தேன். மிஷ்கின் சார் அப்போது என்னுடைய புகைப்படத்தை ஏதோ மலையாள பத்திரிகையின் அட்டைப்படத்தில் பார்த்திருக்கார்.
அதன் பின் "சித்திரம் பேசுதடி' கதையில நான் கதாநாயகியாக நடித்தால் நல்லா இருக்கும் நினைத்துதான் கேரளாவுக்கு வந்து கதை சொன்னாங்க. என "சித்திரம் பேசுதடி' திரைப்படம் பற்றிய சில விஷயங்களை அவர் எடுத்துக் கூறினார். இதனை தாண்டி மலையாள சினிமாவின் சீனியர் இயக்குநர்கள் அனைவருடனும் பாவனா இணைந்துப் பணியாற்றியிருக்கிறார்.
அது குறித்து அவர், ' நான் மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குநர்களான கமல் சார், ப்ரியதர்ஷன் சார், அமல் நீரத், அன்வர் ரஷீத்துன்னு பலரோட வேலை பார்த்திருக்கேன்.இப்போது "ரேகாசித்திரம்' படத்துல கமல் சாரை பார்க்கும்போது எனக்குமே சப்ரைஸிங்காக இருந்தது. இவங்ககூட உதவி இயக்குநர்களாக பணியாற்றியவங்க இன்னைக்கு மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குநர்களாக இருக்காங்க. முக்கியமாக, இந்த சீனியர் இயக்குநர்களோட அனுபவத்துல இருந்து நம்ம சில விஷயங்கள் கத்துக்கலாம்.
ஒரு ப்ளான் இல்லைனா, இன்னொரு ப்ளான் அவங்ககிட்ட ரெடியாக இருக்கும்''. என்றார்.
டிராவிட்தான் ரோல் மாடல் - சித்தார்த்
ஒய் நாட் ஸ்டுடியோஸ் வழங்கும் "டெஸ்ட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, மாதவன், சித்தார்த், மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
"தமிழ் படம்', "விக்ரம் வேதா', "இறுதி சுற்று', "ஜகமே தந்திரம்' உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்த சசிகாந்த், இப்போது "டெஸ்ட்' மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். பிரபல சிங்கரான சக்தி ஸ்ரீ கோபாலன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படம் ஏப்ரல் 4-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி சென்னையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் பேசியிருக்கும் நடிகர் சித்தார்த், "சிறுவயதிலிருந்து நான் பார்த்து ரசித்து, வியந்த கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். இப்படத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டராக நடித்திருக்கும் நான், அவரைப் பார்த்து ரசித்து கற்றுக் கொண்டதை இப்படத்தில் பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறேன். என்னுடைய இக்கதாபாத்திரத்தை அவருக்கே சமர்ப்பிக்கிறேன். உதவிய இயக்குநராகப் பணி செய்தபோது நான் முதன் முதலில் பார்த்து வியந்த ஹீரோ மேடி.
அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இப்போது அவருடன் நடிக்கும்போதும் நிறையக் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தில் எல்லா கதாபாத்திரமும் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். உங்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். புதிய களமாக, சிறப்பான திரைப்படமாக இப்படம் இருக்கும்' என்று பேசியிருக்கிறார்.
ரஜினி வெளியிட்ட விடியோ - காரணம் என்ன?
மத்திய தொழில் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆனதையொட்டி, கடந்த மார்ச் 7 -ஆம் தேதி குஜராத் மற்றும் மேற்குவங்க மாநிலங்களிலிருந்து இரு பிரிவுகளாக சிஐஎஸ்எஃப் வீரர்களின் சைக்கிள் பேரணி தொடங்கியது. இதனை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்திலிருந்து காணொளி வாயிலாக தொடக்கி வைத்தார்.
மேற்கு வங்கத்தில் தொடங்கிய பேரணி 25 நாள்கள் கடந்து 31 -ஆம் தேதியன்று கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் நிறைவடைய உள்ளது. கடலோரம் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சைக்கிள் பேரணியை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்தான் ரஜினிகாந்த் விடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் விடியோவில், "நம் நாட்டின் பெயர், நிம்மதி, சந்தோஷம் அதனை கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டுக்குள் புகுந்து கோரசம்பவங்கள் செய்வார்கள்.
அதற்கு உதாரணம் மும்பையில் 26/11-இல் நடந்த கோர சம்பவம். கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை வாங்கிவிட்டது. கடலோரம் வாழும் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரும் நடமாடினால் அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்.இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 100 சிஐஎஸ்எஃப் வீரர்கள் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோமீட்டர் கடந்து மேற்கு வங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை பேரணி செல்கின்றனர். அவர்கள் உங்களின் பகுதிகளுக்கு வரும்போது அவர்களை வரவேற்று, முடிந்தால் அவர்களுடன் கொஞ்சம் தூரம் சென்று வாருங்கள்' என்று தெரிவித்திருக்கிறார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.