செவிலியர்களுக்கு வரப்போகுது யோகம்..!
'பி.எஸ்.சி. செவிலியர் படிப்பைப் பயின்ற தகுதியான செவிலியர்களுக்கு, தாம்பரம் சேலையூரில் உள்ள நூலகத்தில் 6 மாதங்கள் இலவசமாக ஜெர்மானிய மொழியைப் பயிற்றுவித்து, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பையும் தமிழ்நாடு அரசு பெற்றுத் தருகிறது.
தாம்பரம் மனோபாரதி
'பி.எஸ்.சி. செவிலியர் படிப்பைப் பயின்ற தகுதியான செவிலியர்களுக்கு, தாம்பரம் சேலையூரில் உள்ள நூலகத்தில் 6 மாதங்கள் இலவசமாக ஜெர்மானிய மொழியைப் பயிற்றுவித்து, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பையும் தமிழ்நாடு அரசு பெற்றுத் தருகிறது'' என்கிறார் ஜெர்மானிய மொழியைக் கற்பிக்கும் பயிற்சியாளர் மெர்சி.
அவரிடம் பேசியபோது:
'தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், ஹல்லோ மொழி மையம், "க்ரோபெர்சனல்' ஆகியன இணைந்து வழங்கும் ஆறு மாதப் பயிற்சியையும், ஜெர்மனியில் செவிலியர் தொழில் வாய்ப்பையும் பி.எஸ்.சி. செவிலியர் படித்தச் செவிலியர்கள் பெறலாம். இதற்கு எந்தச் செலவும் இல்லை.
இளம்வயதில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இதுபோன்ற ஒரு பெரும் முயற்சியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, தாம்பரம் மாநகராட்சி நூலகம், அறிவியல் மையம் ஜெர்மன் மொழி பயிற்சிக்காக பயிற்சி மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஹல்லோ மொழி மையம், சென்னை ஏ1 முதல் பி2 நிலை வரை மொழி பயிற்சிகளை வழங்கி, மொழி தேர்ச்சி மட்டுமல்லாமல், கலாசார அறிவு, செயல்முறை பயிற்சிகள், வாழ்க்கை முறை அனுபவங்கள், மெய்நிகர் செயல்பாடுகள் வழங்கப்படுகின்றன.
மொழி பயிற்சி, வேலைவாய்ப்பு, பணி நியமனம், ஆவணங்கள், விசா, பயண ஏற்பாடுகள், முழுமையான உதவி, ஜெர்மனியில் குடியேற்றம், வேலை ஒழுங்குமுறை வழிகாட்டுதல் உள்ளிட்ட அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்குகிறோம்.
இதற்கு "க்ரோபெர்சனல்' தலைவர் கிருஷ்ணா ஜவாஜி, நிர்வாக இயக்குநர் இந்து பாஸ்கர், ஹல்லோ மொழி மைய நிறுவனர்- தலைவர் நடராஜ் உள்ளிட்டோர் இந்தத் திட்டத்துக்கு உதவிக்கரமாய் இருக்கின்றனர். தமிழ்நாட்டின் செவிலியர்கள் சர்வதேச அளவில் சிறப்பான தொழில் வளர்ச்சியை அடைய இந்தத் திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். நாகர்கோவிலில் புதிய பயிற்சி மையத்தை வரும் மே மாதத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளோம்'' என்கிறார் மெர்சி.