திரைக் கதிர்
'மகாராஜா'வில் கிடைத்த பெரிய வெற்றியைத் தொடர்ந்து மிகவும் செலக்டிவ்வாகவே படங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்கிறார் விஜய்சேதுபதி.
'மகாராஜா'வில் கிடைத்த பெரிய வெற்றியைத் தொடர்ந்து மிகவும் செலக்டிவ்வாகவே படங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்கிறார் விஜய்சேதுபதி. தமிழ் நடிகர்களில் அதிகப்படியான படங்களைக் கையிருப்பில் வைத்திருப்பது அவர்தான்.
'ட்ரெயின்' இப்போது ரிலீஸூக்குக் காத்திருக்கிறது. தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் ரெடியாகிவிட்டது. 'சீதக்காதி'க்குப் பிறகு இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ஒரு படத்தையும் முடித்து விட்டார்.
'ஜெயிலர் 2' படத்தில் ஒரே ஒரு நாள் நடித்தாலும் திருப்பம் தரக்கூடிய ஒரு வேடத்தில் சேதுபதி நடித்திருக்கிறார். அவரின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. தியாகராஜா குமாரராஜாவின் 'பாக்கெட் நாவல்' படத்திலும் நடிக்கிறார்.
Advertisement
பவன் கல்யாண் நடிப்பில் உருவான 'உஸ்தாத் பகத் சிங்' திரைப்படம் உகாதி பண்டிகையை முன்னிட்டு கடந்த மார்ச் 19 - ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஹரிஷ் சங்கர் இயக்கிய
இந்தப் படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக நடித்திருக்கிறார். ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரத்திலும், பார்த்திபன் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர்.
இப்படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீலீலா, 'நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் வெளியாகும்போது சமூக வலைதளங்களில் நிறைய நெகட்டிவ் கமென்ட்களும், ட்ரோல்களும் வரும். ஆரம்பத்தில் அது மிகவும் மனதைப் பாதித்திருக்கிறது. பலமுறை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். ஒருகட்டத்தில் 'நமக்கு இந்த சினிமா வேண்டாம்; மீண்டும் கல்லூரிக்குச் சென்று படிப்பைத் தொடரலாமா?' என்று கூட நினைத்திருக்கிறேன்'' எனப் பேசியிருக்கிறார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸூக்குத் தயாராகி வருகிறது மோகன்லாலின் 'த்ரிஷ்யம் 3'.
ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக முன்பு அறிவித்திருந்தார்கள். ஆனால், இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றியிருக்கிறார்கள்.
மோகன்லாலின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மே 21-ஆம் தேதி வெளியாகும் எனத் தற்போது அறிவித்திருக்கிறார்கள். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான போர்ச்சூழல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்திருக்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் இந்திய சினிமாவுக்கென முக்கிய மார்க்கெட் இருப்பதால் ரிலீஸ் தேதியை மாற்றும் முடிவை எடுத்திருக்கிறார்களாம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கும் புதிய முயற்சியைத் தொடங்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் சிரஞ்சீவி. நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் செயல்களால் ஈர்க்கப்பட்டு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளார் என்பதையும் அவர் கூறியிருக்கிறார்.
சூர்யாவின் அகரம் அறக்கட்டளை பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பலரின் கல்விக் கனவுகளை நனவாக்கி வருகிறது. சூர்யா தனது சமூகப் பணிக்கு சிரஞ்சீவியை முன்மாதிரியாகக் கொண்டதாக சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
அண்மையில் நடைபெற்ற உகாதி கொண்டாட்ட விழாவில் சிரஞ்சீவி, 'சூர்யா கல்விக்காக செய்யும் உதவிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். சூர்யா ஏழைகளின் கல்விக்காக செய்யும் விஷயங்கள் எனக்கு ஊக்கமளிக்கின்றன'' எனப் பேசியிருக்கிறார்.