முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பயணம்...

'ரைலா ஆன் ஏர்' என்ற புதிய முயற்சியின்படி, ரோட்டரி கிளப் ஆஃப் கிண்டி, கோயம்புத்தூர் ரோட்டரி சங்கங்கள் இணைந்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 30 மாணவர்களைத் தேர்வு செய்து விமானத்தில் அழைத்துச் சென்றனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 9:44 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2026 at 9:43 PM

தாம்பரம் மனோபாரதி

'ரைலா ஆன் ஏர்' என்ற புதிய முயற்சியின்படி, ரோட்டரி கிளப் ஆஃப் கிண்டி, கோயம்புத்தூர் ரோட்டரி சங்கங்கள் இணைந்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 30 மாணவர்களைத் தேர்வு செய்து விமானத்தில் அழைத்துச் சென்றனர்.

இதுவரை விமானத்தில் செல்லாத மாணவர்களைத் தேர்வு செய்த அவர்கள், சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்று, மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்தனர். கோவையில் ஜி.டி. நாயுடு அருங்காட்சியகத்தை மாணவர்கள் பார்வையிட்டதோடு, அவர்களின் தன்னம்பிக்கை, கனவு, வளர்ச்சி, கற்றல் மனப்பாங்கு ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சிகளையும் அளித்தனர்.

Advertisement

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 9:43 PM

இதுகுறித்து ரோட்டரி மாவட்டம் 3233 ஆளுநர் தேவேந்திரன் கூறியது:

'ரோட்டரி சங்கம் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறது. 'நன்மைக்காக ஒன்று சேருங்கள்' என்ற கருத்தை வைத்துச் செயல்பட்டு வருகிறோம். நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்து, அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இதுவரை விமானத்தில் செல்லாத, நன்றாகப் படிக்கும் 30 பேரைத் தேர்வு செய்து, விமானத்தில் அழைத்துச் சென்று வந்தோம். இது பயணம் மட்டும் அல்ல; மாணவர்களின் மனதில் இருக்கும் தடைகளை உடைத்து, 'என்னால் முடியும்' என்ற நம்பிக்கையை விதைக்கும் முயற்சியாகும்' என்கிறார் தேவேந்திரன்.

ரோட்டரி கிளப் ஆஃப் கிண்டியின் தலைவர் ராதா க்ரிஷ்

'தலைமைத் திறன், தன்னம்பிக்கை, ஒழுக்கம், தனித்திறன் உள்ளிட்ட பல்வேறு வகுப்புகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். கோயம்புத்தூர் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ஒரு புது முயற்சியை மேற்கொண்டோம். அடுத்த ஆண்டு மிகப் பெரிய திட்டங்களை வைத்துள்ளோம்' என்றார்.

மாணவன் திருமுருகன்

'பள்ளியில் சிறந்த முறையில் படிக்கும், விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, முதல் முறையாக விமானத்தில் அழைத்துச் சென்றனர். இந்த அனுபவம் மிகவும் புதியதாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. கோயம்புத்தூரில் ஜி.டி. நாயுடுவின் அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்த்து, அவர்களின் புத்தகங்களையும், கண்டுபிடிப்புகளையும் அறிந்தோம். விமானத்தில் பறந்தது, விமானத்தில் ஏறியது, இறங்கியது அனைத்தும் எங்களுக்குப் புதுவிதமான அனுபவத்தைக் கொடுத்துள்ளது.

பயணத்தின்போது, மேகக் கூட்டங்களை அருகில் பார்க்கும்போது மிகவும் ஆனந்தமாக இருந்தது. விமானம் தரையில் இருந்து மேலே எழும்பும்போது அச்சமாக இருந்தது. பயணத்தின் வாயிலாக, உலகம் மிகவும் பெரியது; அனைத்து இடங்களுக்கும் சென்று அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது' என்கிறார் திருமுருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.