குறைபடு தேன்!
சங்க இலக்கிய அகப்பாட்டுகள் திணைதுறைகளோடு அமைந்த பாடல்கள். அவற்றில் வரும் தலைவி உயர்ந்த பண்புகளின் உறைவிடமாகத் திகழ்பவள்
சங்க இலக்கிய அகப்பாட்டுகள் திணைதுறைகளோடு அமைந்த பாடல்கள். அவற்றில் வரும் தலைவி உயர்ந்த பண்புகளின் உறைவிடமாகத் திகழ்பவள். ஆனால், அவற்றில் வரும் தலைவனை அப்படிச் சொல்ல இயலாது. அவன் வீரமும் ஈரமும் ஊக்கமும் நிறைந்தவன் என்றாலும் ஒழுக்கத்தில் சிறந்தவன் அல்லன். அவன் கால்கள் பரத்தையர் சேரியை நோக்கி நடக்கின்றன.
மருதத்திணைப் பாடல்களில் தலைவன் பரத்தையோடு கொள்ளும் உறவே தலைவியின் ஊடலுக்குக் காரணமாக அமைகிறது. தலைவனின் அச்செயலால் மனம் வாடித் துன்புறும் தலைவி, அவன் மீது மனவேறுபாடு கொள்கிறாள். அவன் பரத்தையர் வீட்டிலிருந்து திரும்பி வந்து தன்னை அணுகும்போது விலகி நிற்கிறாள். அவள் ஊடலைத் தோழியோ பிறரோ தணிவிக்க, அவள் மனம் இளகி அவனை ஏற்றுக்கொள்கிறாள். தானே தணிந்து ஏற்றுக்கொள்வதும் உண்டு.
தலைவனின் தவறான ஒழுக்கத்தைத் தோழியும் சிலபொழுது தலைவியும் சுட்டிக் காட்டுவர். அப்படிக் காட்டும்போதும் அவர்கள் சொற்களில் கண்ணியம் குடியிருக்கும். அவர்கள் அவனது பிழையை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லும் அழகே அழகு.
Advertisement
அகப்பாடல்களில் காணப்படும் இந்த உத்தியை "உள்ளுறை உவமம்' என்பர். பாட்டில் சொல்ல நினைக்கும் கருத்தினை அதற்குரிய உவமைகளைக் கூறிப் பொருள்களைப் (உவமேயத்தை) படிப்பவர் அறிந்து அமைத்துக் கொள்ளும்படி உள்ளே வைத்துப் பாடுவது "உள்ளுறை உவமம்' (தொல்.அகத். நூ.51) எனப்படும்.
தலைவன், தலைவி, தோழி, நற்றாய், செவிலி முதலியோர் இப்படிக் குறிப்பாகப் பேசுவதற்குரியவர்கள். பெரும்பாலும் தோழியும் தலைவியுமே இப்படி உள்ளுறை உவமம் அமைத்துப் பேசுவதாகக் காணப்படுகிறது.
தலைவன் பரத்தையரோடு இன்பம் நுகர்ந்து திரும்புகிறான். அந்தத் தரமற்ற செயலைத் தோழி மருதநிலத்தில் இருக்கும் தாமரை, குவளை, வண்டு ஆகியவற்றைக் கொண்டு குறிப்பாகத் தெரிவிக்கிறாள். பேச்சு ஏதோ வண்டு ஒன்றின் செயலைப் பேசுவதுபோல் இருக்கிறது. ஆனால், அது தலைவனின் அடாத செயலை மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் பேச்சாகும்.
ஓர் அழகான தாமரை மலர். அது மிகுந்த தேனினைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. அந்தச் செழுமலரில் தேன் உண்ணுதற்குரிய வண்டு அதனை விடுத்துக் குவளை மலரை நாடிச் செல்கிறது. அதுவோ வெறிகொண்ட சுரும்புகள் வேட்கையோடு படிந்து தேனை உண்டு சென்ற மலர். அதில் சிறிதளவு தேனே எஞ்சி இருக்கிறது. அந்தச் சிறிதளவு தேனை விரும்பியும் அலைகிறதே வண்டு. என்னே அறியாமை! என்கிறாள் தோழி.
வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்
குறைபடுதேன் வேட்டும் குறுகும் - நிறைமதுச்சேர்ந்து
உண்டாடும் தன்முகத்துச் செவ்வி உடையதோர்
வண்டா மரைபிரிந்த வண்டு.
இதில் வளமான தாமரை தலைவியையும், அது தேன் நிறைந்து ஆடிக்கொண்டிருப்பது அவள் மிகுந்த இன்பத்தை வழங்கக் காத்துக் கொண்டிருப்பதையும், தாமரையைப் பிரிந்த வண்டு தலைவியைப் பிரிந்த தலைவனையும், வெறிகொண்ட சுரும்புகள் காமம்மிக்க விடலைகளையும், சுரும்புகளால் மேயப்பட்ட குவளை காமுகர்களால் நுகரப்பட்ட பரத்தையையும், குவளை மலரில் உள்ள சிறிதளவு தேன் பரத்தை தரும் சிறிதளவு இன்பத்தையும் குறிக்கும் உவமைகளாக உள்ளன.
""செவ்வி உடையது ஓர் வண் தாமரை'' என்பது தலைவி அழகும் இனிமையும் நிறைந்தவள் என்பதையும், ""குறைபடுதேன்'' என்பது சிறிதளவு கிடைக்கும் இன்பம் என்பதனோடு, குறைவை ஏற்படுத்தும் இன்பம் என்பதனையும் சுட்டும் வகையில் அமைந்துள்ளன. சங்க காலத்தில் பரத்தமை ஒழுக்கம் குற்றமாகக் கருதப்படவில்லை என்றாலும் குறையாகக் கருதப்பட்டது.
தலைவன் தவற்றினை நயமாகச் சுட்டும் இப்பாட்டு உள்ளுறை உவமத்திற்கு எடுத்துக்காட்டாக இளம்பூரணர் உரையில் தரப்பட்டுள்ளது. இப்பாட்டைப் பாடியவர் யார் என்பது தெரியவில்லை. எத்தனையோ சங்கப் பாட்டுகளை மேற்கோள் காட்டும் இளம்பூரணர், உள்ளுறை உவமத்திற்கு அவற்றில் ஒன்றினை எடுத்துக்காட்டாமல் இந்த வெண்பாவைக் காட்டியிருப்பதே இதன் சிறப்பினை உணர்த்துகிறது.