முகப்பு
தமிழ்மணி

குக்கிராமத்தில் குறளின் குரல்!

திருவள்ளுவரின் புகழ் இன்றளவும் எங்கெல்லாமோ ஓங்கி ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவ்வாறு ஓங்கி ஒலிக்கும் ஓர் இடம் சீனாங்குடி என்ற குக்கிராமம். ஆம், வள்ளுவருக்குக் கோயில்கட்டி அவரை தெய்வமாக வழிபடும் அளவுக்கு அச்சிறிய கிராமம் பெரும்புகழை அடைந்திருக்கிறது.

Updated On : 5 ஜனவரி, 2014 at 2:16 AM
பகிர்:

திருவள்ளுவரின் புகழ் இன்றளவும் எங்கெல்லாமோ ஓங்கி ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவ்வாறு ஓங்கி ஒலிக்கும் ஓர் இடம் சீனாங்குடி என்ற குக்கிராமம். ஆம், வள்ளுவருக்குக் கோயில்கட்டி அவரை தெய்வமாக வழிபடும் அளவுக்கு அச்சிறிய கிராமம் பெரும்புகழை அடைந்திருக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து 13 கி.மீ. தூரத்தில் உள்ள சீனாங்குடியில் திருவள்ளுவருக்குக் கோயில் கட்டப்பட்டு, பொங்கல் வைத்து வழிபாடுகளும், சிறப்பு பூஜைகளும் நடந்து வருகின்றன. திருவள்ளுவரே இத்திருக்கோயிலின் மூலவராகவும், கிராமத்தின் காவல் தெய்வமாகவும் இருக்கிறார்.

இக்கோயிலின் நிர்வாகியான கண்ணுச்சாமியின் தாத்தா ஆறுமுகம், வள்ளுவர் மீது மிகுந்த பற்றுடையவராம். அதனால் ஊர்க் கண்மாயில் இருந்த கருவை மரத்துக்கு அடியில் ஒரு கல்லை நட்டுவைத்து அதையே திருவள்ளுவராக நினைத்து வழிபட்டு வந்துள்ளார். அவருடைய மகன் பம்பையன் என்பவரும் இதேபோல வணங்கிவந்த போது ஒரு நாள் அவர் கனவில் வள்ளுவர் வந்து தனக்குக் கோயில் கட்டுமாறு கேட்டுக்கொண்டதன் விளைவாக இக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கண்ணுச்சாமியின் பேரன்களான அழகரும் பழனியும் 1995-இல் இக்கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்தியுள்ளனர். அதன்பிறகு 2003-ஆம் ஆண்டு மகா குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடக்கும் முளைக்கொட்டுத் திருவிழாவில் கிராமத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பொங்கல் வைத்து வள்ளுவரை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு தீபாவளியன்றும் சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும் நடந்துவருகின்றன. இக்கோயிலின் தல விருட்சம் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இத்திமரம். மூலவர் திருவள்ளுவர்.

வள்ளுவரின் திருக்குறளை முழுவதுமாக இக்கிராம மக்கள் பயிலவில்லை என்றாலும், அவருக்குக் கோயில் கட்டி வழிபடும் அளவுக்கு இவர்கள் வள்ளுவர் மீது கொண்ட வள்ளுவ பக்தியும் நம்பிக்கையும் பிரமிக்கவைக்கிறதல்லவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.