முகப்பு
தமிழ்மணி

காப்பிய இலக்கணம்

பொருளால் தொடர்ந்து வரும் செய்யுள் இலக்கியமே காப்பியம் ஆகும். இது "தொடர்நிலைச் செய்யுள்' என்றும் கூறப்படும். சோழர் காலமே காப்பிய காலமாகும்.

Updated On : 2 நவம்பர் 2014, 4:19 am IST
பகிர்:

பொருளால் தொடர்ந்து வரும் செய்யுள் இலக்கியமே காப்பியம் ஆகும். இது "தொடர்நிலைச் செய்யுள்' என்றும் கூறப்படும். சோழர் காலமே காப்பிய காலமாகும். சிலப்பதிகாரமே தமிழின் முதல் காப்பியம் என்பது அதன் கட்டமைப்பு, மொழிக்கூறு, போன்றவற்றால் உறுதிப்படும். காப்பியங்களுக்கென்று சில இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன. இவை பெருங்காப்பியம், சிறுகாப்பியம் இரண்டுக்கும் பொருந்தும். காப்பிய இலக்கணங்கள் வருமாறு:

பெருங்காப்பிய இலக்கணம்

வாழ்த்து, வணக்கம், வருபொருள் ஆகிய மூன்றில் ஒன்று முதலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

Advertisement

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருளும் அமைந்திருக்க வேண்டும்.

காப்பியத் தலைவன் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாக இருக்க வேண்டும்.

மலை, கடல், நாடு, நகர், பருவம், ஞாயிறு, திங்கள் ஆகியவற்றின் வருணனைகள் இடம்பெற வேண்டும்.

திருமணம், முடிசூடுதல், பொழில் விளையாட்டு, புனல் விளையாட்டு, ஊடுதல், கூடுதல், மக்கட்பேறு முதலிய நிகழ்ச்சிகள் இருத்தல் வேண்டும்.

போர் செயல்களும், எண்வகை சுவைகளும், பாவங்களும், சருக்கம், பரிச்சேதம் போன்ற பிரிவுகளைக் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும்.

இத்தகைய இலக்கணங்கள் அமையப்பெற்ற ஐம்பெருங் காப்பியங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.

சிறுகாப்பிய இலக்கணம்

அறம், பொருள், இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஒன்றோ, பலவோ குறைந்து பெருங்காப்பியத்திற்கு உரிய ஏனைய இலக்கணங்களைப் பெற்று வருவது சிறுகாப்பியத்தின் இலக்கண வரையறை.

இத்தகைய இலக்கணங்கள் அமையப்பெற்ற ஐஞ்சிறு காப்பியங்கள்: நாககுமார காவியம், உதயணகுமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, சூளாமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.