பதிற்றுப்பத்தில் அறுவை மருத்துவம்
ழந்தமிழ் இலக்கியங்களில் உவமைகள் வாயிலாகவே பெரும்பாலும் மருத்துவத் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ழந்தமிழ் இலக்கியங்களில் உவமைகள் வாயிலாகவே பெரும்பாலும் மருத்துவத் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்துச் சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்ட சித்த மருத்துவம் மிகமிகப் பழைமையானது. இயற்கை தரும் பூ, இலை, காய்கனி முதலியவற்றைக் கொண்டு மருந்து தயாரிக்கப்படுவது. பக்க விளைவை ஏற்படுத்தாதது; நிலையான பலன் தரக்கூடியது. அயலகத்து அலபதிக் (அலோபதி) மருத்துவத்தில் அறுவை மருத்துவம் சிறப்பிடம் பெற்றுள்ளது. இந்த அறுவை மருத்துவமுறை சித்த மருத்துவத்திலும் இருந்துள்ளது. அறுவை மருத்துவம் முடிந்த பிறகு, மேற்புறத் தோலை ஊசியால் தைக்கும் முறையும் பண்டு இருந்திருக்கிறது என்பது ஓர் உவமையால் தெரியவருகிறது.
"சிரல்' என்பது ஒரு பறவை. இது சிச்சிலிப் பறவை. இது மீன்கொத்திப் பறவை (கிங் ஃபிஷர்) என்றும் சொல்லப்படும். இது வேகமாக நீருக்குள் பாய்ந்து, குறிவைத்த மீனைப் பிடித்து, தண்ணீரை ஊடுருவிக்கொண்டு மேலே எழும்பி அந்த மீனை தின்னும். இப்படிப்பட்ட இந்தச் சிரல் பறவையின் செயல் உவமையாகக் காட்டப்பட்டுள்ளது.
Advertisement
பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தைப் பாடிய பரணர், சேர மன்னன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பற்றிய பாடலில் இந்த உவமையைக் கையாண்டுள்ளார். மன்னனின் மார்பில் அறுவை மருத்துவம் செய்யப்பட்டது. பிறகு, மேற்புறத் தோலை இணைக்கும் முறையில், நூல் கொண்ட ஊசியால் தைக்கப்பட்டது. அப்போது அந்த ஊசி, தோலுக்குக் கீழும் மேலும் சென்றுவந்தது. சிரல் கூர்மையான மூக்கு உடையது. அதுபோல ஊசியும் கூர்மையான முனை பெற்றுள்ளது. நீருள்ளிருந்து சிரல் மேலே வரும்போது, அதன் உடம்போடு தண்ணீரும் வரும். அதுபோல் ஊசி, மேல் வரும்போது அத்துடன் சேர்ந்து கொஞ்சம் ரத்தமும் வரும். இப்படித் தோலைத் தைக்கும் ஊசியின் செயலுக்குச் சிரல் பறவையின் செயலை உவமையாகக் காட்டியுள்ளார் பரணர்.
""இரும்பனம் புடைய லீகை வான்கழல்
மீன்றேர் கொட்பிற் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்ன நெடுவல் ஊசி
நெடுவரி பரந்த வடுவாழ் மார்பின்
அம்புசேர் உடம்பினர் நேர்ந் தோரல்லது
தும்மை கூடாது மலைந்த மாட்சி'' (5:1-6)
மேலை நாட்டில் கி.பி.16ஆம் நூற்றாண்டளவில் அறுவை மருத்துவமுறை தோன்றியது. ஆனால், இந்த மருத்துவமுறை 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது என்பதை சங்க இலக்கியம் கூறுகிறது.