தமிழியலே அறிவியலின் வழிகாட்டி
மனிதகுலம் தோன்றிய நாள்முதல் இன்று வரையிலும் அறிவின் பாதையில் தனது ஒவ்வோர் அடியையும் முன்நோக்கி எடுத்து வைத்துக்கொண்டே வருகிறது.
அறிவியல் தமிழ் - 1
மனிதகுலம் தோன்றிய நாள்முதல் இன்று வரையிலும் அறிவின் பாதையில் தனது ஒவ்வோர் அடியையும் முன்நோக்கி எடுத்து வைத்துக்கொண்டே வருகிறது. 2000 ஆண்டுகட்கு முன்பு அறிவியலை முன்னிறுத்தித் தமிழில் இலக்கியங்கள் தோன்றிவிட்டன என்றால், அத் தமிழ்மொழியின் சிறப்பைத் தனித்துக் குறிப்பிடத் தேவையில்லை. தன்னையும், தன் மொழியையும், தான் சார்ந்த உலகத்தையும், தன்னோடு வாழும் உயிர்களையும் இலக்கணப்படுத்தி வழங்கியிருக்கிறார் தொல்காப்பியர். இதை அறிவியலின் பாதையில் மனிதகுலம் எடுத்து வைத்த முதலடி எனலாம்.
உலகம் என்பது பஞ்ச பூதங்களின் கூட்டுச் சேர்க்கை என்றும், உடலும் அவ்வாறே என இற்றைக் கால இயற்பியல் கோட்பாடு சுட்டுகிறது. ஆனால், தொல்காப்பியர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே,
""நிலம் தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம்''
எனத் தாம் வகுத்த இலக்கணத்துள் வகைப்படுத்திவிட்டார். அவ்வகையைத் தொகுத்து, நிலம் என்பது திண்மம். அதுவே உடல்; தண்ணீர் என்பது நீர்மம். அதுவே இரத்தம் முதலான சுரப்பிகள்; காற்று என்பது வாயு. அதுவே சுவாசம்; நெருப்பு என்பது பிணைமம் அதுவே வெப்பம்; வானம் என்பது வெற்று. அதுவே உயிர் எனவும் கூறியுள்ளார். மேலும், இவற்றின்படி உலகில் வாழும் உயிர்கள் பெறும் அறிவையும் பகுத்துணர்த்துகிறார். ஒன்று முதலான ஆறறிவு பெற்ற உயிர்களின் அட்டவணையையும் இணைத்துத் தருகிறார் தொல்காப்பியர். ஆக, அறிவியலின் முதலடியைத் தமிழன் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே துவக்கி வைத்துவிட்டான். இதன்மூலம் தமிழியலே அறிவியலின் வழிகாட்டி என்பதை உணரலாம்.
தமிழர்கள் தாம் வாழ்ந்த நிலத்தை ஐவகைப்படுத்தி, அவற்றின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தி, அந்நிலவாழ் மக்கள், உயிர்கள், தெய்வம் முதலான அனைத்திற்கும் பெயர்களிட்டு வழங்கிச் சிறந்துள்ளனர். இவற்றோடு சேர்த்துப் பருவகால வகைபாடுகளையும், அதற்கேற்ற தட்ப வெப்பங்களையும் பகுத்துள்ளனர். இந்த ஐவகை நிலங்களுக்கும் ஏற்ற வேளாண் முறைகளையும் அதற்கேற்ப உழவையும், உழவர்தம் பெருமையையும் தமிழ் இலக்கியங்களை விஞ்சுமளவிற்குப் பிறமொழி இலக்கியங்கள் பாடவில்லை என்பது உறுதி.
நமது நாட்டு மன்னர்கள் உழவுத் தொழிலுக்குச் செய்த உதவியை, ""காடு கொன்று நாடாக்கி; குளம் தொட்டு நீர்தேக்கி'' எனப் பட்டினப் பாலை பாராட்டிப் பேசுகிறது.
நிலன் நெளி மருங்கில் நீர்நிலைப் பெருகத்
தட்டோர், அம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே
என்று புறநானூறு கூறிய புகழைக் கல்லணையைக் கட்டிக் கரிகாலன் பெற்றான் என்பது அழியாத வரலாறு. அது மட்டுமல்லாது அறிவியலின் முதற்படியே உழவினின்றுதான் தோன்றிற்று என்றும் உறுதியிட்டுச் சொல்லுவாற்போல, ""உழுவார் உலகத்தார்க்கு ஆணி'' என்கிறார் வள்ளுவர். இஃதோடன்றி உழவுத் தொழிலின் திட்ட நுட்பங்கள் முதலானவை திருக்குறள் மற்றும் பல தமிழிலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. இவ்வாறு உழவுக்கும் தொழிலுக்கும் முதல் வணக்கம் செய்து அவற்றின் வாயிலாக அறிவியலை இம்மண்ணுக்கு முதலில் வழங்கியது தமிழியலே என்பது புலனாகிறது.
அறிவியலின் இன்றைய மிகப்பெரும் உருவமான பொறியியலும் தமிழர்கள் என்றைக்கோ கண்ட உத்திகள். அவை யாவும் கலையம்சத்தோடும் ஆன்மிக உணர்வோடும் எழுப்பப்பெற்ற கோயில்களாக இன்றும் நம்முன் நெடிதுயர்ந்து நிற்கின்றன. கலைகளும், அறிவியலும் கலந்ததொரு கலவையாய் அமைந்த கோயில்களின் அமைப்பு இன்றைய காலத்துப் பொறியாளர்கள் பலரையும் வியக்க வைப்பது தமிழர்களின் பொறியியல் அறிவுக்குச் சான்றாகிறது.
இயற்கையை முழுக்க ஆராய்ந்து, திசைகளைத் தேர்ந்து, நிலம் கற்று அவை எழும்பிய விதங்கள் தமிழர்தம் பொறியியல் அறிவிற்கும் வானியலறிவிற்கும் கட்டியம் கூறுவனவாகத் திகழ்கின்றன. இவற்றுக்கிடையே உலோகவியல், சிற்பவியல், நுணுக்கவியல், புவியியல் முதலான அறிவியலும் அடங்கியிருப்பதை ஆய்ந்து காணின் தெளியலாம்.
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்,
அரியவும், பெரியவும், நெரிய ஈண்டி,
வளம் தலைமயங்கிய நனந் தலை மறுகின்
நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும்
ஏமாப்ப இனிது துஞ்சி
என்று பட்டினப்பாலை உணர்த்துகிறது. சங்ககாலத்துத் தமிழர்கள் கடல்கடந்து வாணிபம் செய்ததற்கான சான்றுகள் எப்போதோ கிடைத்துவிட்டன. தமிழ், தனக்கான சிந்தனைத் தளத்திலேயே சென்று உலகளாவிய பொதுமைக்கு முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறது.
இன்றைய அறிவியல் யுகத்தில், "தமிழியல் அறிவியலுக்கு முன்பாகத் தோற்றிருப்பதாகவும் இன்னும் தமிழியத்தையே போற்றிப் பாதுகாப்பது தகாது, புதியன புகுதல் வேண்டும்; அறிவியலை அதன் வாயிலாகவே அறிதல் வேண்டும்' என்பது ஒருசாராரின் கருத்தாகவே விளங்கி வருகிறது. இது பொருத்தமானதன்று. ஏனெனில், தமிழியம் காணாத அறிவியலை இவ்வுலகம் புதிதாகக் கண்டுவிடவில்லை. பொறிகளும், கருவிகளும், மொழியும் வேண்டுமானால் புதிதாக இருக்கலாமே தவிர, நெறி ஒன்றுதான். தமிழில் இல்லாத புதுநெறி ஒன்று கண்டுபிடிக்கப்படுமாயின், அது மனித குலத்துக்குப் பகைசெய்யும் நெறியாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.