முகப்பு
தமிழ்மணி

வதுவைச் சோறூட்டல்! மனித வாழ்வின் ஒப்பற்ற

அறநெறிப் பண்புகளை உலகுக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருப்பது நந்தமிழ்த் தொன்மரபேயாகும்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:24 PM
பகிர்:

அறநெறிப் பண்புகளை உலகுக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருப்பது நந்தமிழ்த் தொன்மரபேயாகும்.
இன்றளவிலும் நந்தமிழர் இல்லங்களில் நடைபெறும் திருமண (வதுவை) நிகழ்வுகளில் முறைப்பெண் தோழியர்கள் மணமக்களுக்குப் போட்டிகள் நடத்துவர். அப்போட்டிகளில் ஒன்றுதான் 'வதுவைச் சோறூட்டல்'. இப்போட்டியில் தோற்றவர் வென்றவருக்குச் சோறூட்ட வேண்டும். வென்றவரை அச்சபை நடுவே அமரச்செய்து இலை விரித்து உணவிட்டு, அவருக்கு ஊட்டிவிட வேண்டும். இதுதான் அப்போட்டியின் விதிமுறை.
வதுவைச் சோறூட்டல் என்னும் இப்போட்டியானது, ஒரு குறுகிய வாயை உடைய தோண்டி(பானை, குடம்)யை எடுத்து, அதில் மஞ்சள் நீரிட்டு நிரப்பி காசு, பாக்குவெட்டி, மிஞ்சி அல்லது பாலூட்டும் சங்கு (பாலாடை) இவற்றைப் போட்டு, மணமகனையும் மணமகளையும் (உள்ளே உள்ள இப்பொருள்களை) எடுக்கச் சொல்வர். முறைப்பெண் தோழியர் யாவரும் சுற்றி வட்டமாக நின்று கேலி செய்வர். மணமகன் தோற்பார் என்று கூறைப் புடவை ஒன்றைக் கையிலேயே வைத்திருப்பர். ஒருத்தி அகப்பையைக் கையிலே கொடுப்பேனென்று நகையாடுவாள். தமிழர்களின் எல்லாத் திருமண இல்லங்களிலும் இப்போட்டியில் மணமகனே வென்றுவிடுவார்.
இதற்குக் காரணம் யாதெனின், தமிழ்ப் பெண் மகளின் விட்டுக்கொடுக்கும் தகை மாண்பு. புது மணப்பெண் குடத்திற்குள்ளே யாரும் அறியாமல் தாம் எடுத்த பொருள்களைக் கணவன் கைக்கு மாற்றித் தான் தோற்றதாக வெறுங்கையை வெளியே எடுப்பாள். இஃது உரிய தோழிக்கு மட்டுமே தெரியும். கணவனின் மானத்தைக் காப்பாற்றும் உயர்ந்த தமிழ்ப் பண்பு ஒவ்வொரு தமிழச்சியிடமும் உண்டு. இதனை, சேந்தன் பனையவயல் சிவக்கவிராயரின் பாடலின் மூலம் அறியலாம். அப்பாடல் வருமாறு:

''தோண்டியிலிட்ட பாண்டிப் பொன்னும்
கோழிக் காசும் குறடும் கொள்ளென
மன்னவன் வேண்டி மங்கை திணிப்பத்
தோழியறியும் தொன் மரபிதுவே''

இதன் பொருளாவது, 'பானையிலிட்ட வேப்பம் பழம் போன்றிருக்கும் பாண்டிய நாட்டுப் பொற்காசும், கோழி உருவுடைய சோழ நாட்டுக் காசும், சேர நாட்டுப் பாக்குவெட்டியும் கணவன் கையில் வைத்துத் திணிக்கிறாள். இஃது தோழிக்கு மட்டுமே தெரிந்த தொல் பழங்காலத்துத் தமிழ் மரபாகும்' என்பதாம்.
தமிழ்க் காதலர் உள்ளம் படர்ந்த (அறநெறி) நெறியில், ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் துணை நிற்கிறாள் என்பதே தமிழ் மரபு } மாண்பு.

-முனைவர் கா. காளிதாஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.