ஒரே மாதத்தில் 2வது முறை: பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
மத்திய கிழக்கு போரால் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது குறித்து....
பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டாக இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் போர் கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத விலை உயர்வாகும்.
Advertisement
Advertisement
அதன்படி, பாகிஸ்தானில் டீசல் விலை 55 சதவீதமும், பெட்ரோல் விலை 43 சதவீதமும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 137.23 (42.7 சதவீதம்) உயர்த்தப்பட்டு, ரூ. 321.17-லிருந்து ரூ. 458.41-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 184.49 (55 சதவீதம்) உயர்த்தப்பட்டு, ரூ. 335.86-லிருந்து ரூ. 520.35-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் உயர்வு காரணமாக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று அந்த நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சர் அலி பர்வேஸ் மாலிக் தெரிவித்துள்ளது.
ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வால் கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலை ஏற்கெனவே சுமார் 20 சதவீதம் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.