முகப்பு
தமிழ்மணி

சேடிக்குச் செம்பட்டு அணிவித்தல்

சங்க காலத்தில் தலைவன் தன் தலைவியை விட்டுப் பிரியும் பிரிவுகளுள் ஒன்று, பரத்தையற் பிரிவு. பூப்பெய்து முன்னே பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும் மரபு முற்காலத்திலிருந்தது.

Updated On : 4 ஜூன், 2017 at 4:19 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:10 PM

சங்க காலத்தில் தலைவன் தன் தலைவியை விட்டுப் பிரியும் பிரிவுகளுள் ஒன்று, பரத்தையற் பிரிவு. பூப்பெய்து முன்னே பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும் மரபு முற்காலத்திலிருந்தது. அவ்வாறு பூப்பெய்யும் முன்னே அவளைத் திருமணம் செய்து கொள்ளும் தலைவன், அவளைவிட அகவையில் மூத்தவனாக இருப்பான். அதனால், அத்தலைவன், தன் தலைவியை விட்டுப்பிரிந்து, பரத்தையிடம் சென்று வருவது வழக்கம். இவ்வழக்கம் பிற்காலத்தில் புலவர்கள் பலரால் கண்டிக்கப்பட்டது.
தலைவன் ஒருவன் இத்தகைய தலைவி ஒருத்தியைத் திருமணம் செய்து கொள்கிறான். தன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்கிறான். அவ்வாறு சென்றிருந்த ஒரு நாளில், வீட்டிலிருந்த தலைவி பூப்பெய்தி விடுகிறாள். அச்செய்தியைத் தலைவனிடம் எப்படியாவது தெரிவித்தாக வேண்டும். அதனை நாகரிகமாகத் தெரிவிக்கும் முறையொன்று முற்காலத்தில் இருந்தது.
பொதுவாக, தலைவி பூப்படைந்த செய்தியை முதலில் தோழிதான் அறிவாள். அறிந்த உடனே தோழி, அங்கிருக்கும் பணிப்பெண்களுள் ஒருத்திக்குச் செம்பட்டினை உடுத்துவிப்பாள். மேலும், நல்ல அணிகலன்களை அணிவிப்பதுடன், அவளுக்குச் செஞ்சாந்தும் பூசிவிடுவாள். பின்பு, சிவந்த குவளை மலர்களையும் தலைக்குச் சூட்டிவிட்டு அழகுபடுத்துவாள். இவ்வாறு, அழகிய தோற்றமளிக்கும் - செந்நிறக் காட்சிக் குறியீட்டுடன் தோன்றும் அவளை தலைவன் தங்கியிருக்கும் பரத்தை வீடு நோக்கி அனுப்புவாள் அத்தோழி.
தலைவனை நோக்கிப் புறப்படும் அவளிடம், ""அங்கு தோன்றப் போகும் உன்னைப் பார்த்ததும், அப்பரத்தை கோபத்துடன் உன்னை வசைபாடுவாள். அப்படி அவள், வருந்தும்படியான வசைமொழிகளைச் சொன்னாலும் அவளை எதிர்த்துப் பேசாமல் திரும்பி வந்துவிடு!'' என்று தோழி அறிவுரை கூறி அனுப்புவாள்.
அங்கு சென்ற, செம்பட்டு உடுத்திய சேடியைக் கண்ட, தலைவனின் தோழர்கள் தலைவனிடம் இச்செய்தியைத் தெரிவிப்பதுடன், ""நீ குழந்தைச் செல்வங்களைப் பெற்று உனது குலம் தழைக்க வேண்டுமானால், உன் தலைவியைச் சேர்ந்து, அவளை மகிழ்விக்க வேண்டி உடனே உனது
இல்லத்திற்குச் செல்வாயாக!'' என்று அறிவுரை கூறுவர்.
சேடிக்குச் செம்பட்டு அணிவித்து, தலைவி பூப்பெய்திய செய்தியைத் தலைவனுக்குத் தெரிவிக்கும் அம்மரபினைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "திணைமாலை நூற்றைம்ப'தில் உள்ள பாடல் பின்வருமாறு காட்சிப்படுத்தியுள்ளது.

""அரத்தம் உடீஇ அணி பழுப்பப் பூசிச்
சிரத்தையாற் செங்கழுநீர் சூடிப் - பரத்தை
நினைநோக்கிக் கூறினும் நீமொழியல் என்று
மனைநோக்கி மாண விடும்.'' (பா.144)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.