இளமை அழகு ததும்பி வழியும் அவனோர் ஆணழகன். அந்த முல்லை நிலத்துத் தலைவர் ஓர் ஓவிய அழகியைக் கண்டு காதல் கொண்டான். கண்கள் நான்கும் இணைபிரியா ஒளி மழையில் நனைந்தன.
இளவேனிற்காலம் விடைபெற்றது. முதுவேனில் காதல் புறாவைப் பின்னுக்குத் தள்ளியது. இவள் ஒருத்தி மட்டும்தானோ அவனுக்கு...? எத்தனையோ வரவுகள்.
அன்புத் தலைவியின் பிரிவாற்றாமை அவளது நினைவைச் சுமந்து வந்து "நலம் புனைந்து' உரைத்தது. நெஞ்சோடு பேசிப் பேசிப் புலம்பினான். அவனது நல்வரவு காணாமையினால் மனக்கொதிப்பில் தன் இல்லத்தரசி வீட்டு வாயிலில் நின்றாள். ஓடிவந்த இளவரசன் தன் வீட்டு வாயிலில் நின்றுகொண்டிருந்த காதல் மனையாளைக் கண்டான். ஆரத்தழுவ முயன்றான். விலகிநின்ற அந்தக் கற்பரசி அவனிடம், "முல்லை நிலத்து அதிபனே! பாண்டியனே, இந்நாள் வரை என்னைப் பிரிந்து மாதர் பலரைத் தழுவிக் கிடந்தாய்.
ள்ஜ்ஜ்கற்பிழந்த நீ என்னைத் தழுவ நினையாதே! பேச வேண்டியவற்றை எட்டிநின்று என் முகம் பார்த்துப் பேசு...' என்றாள். ஆண்களுக்கும் "கற்பு' இன்றியமையாதது என்பதை இத்தலைவி அக்காலத்திலேயே உணர்த்தியிருக்கிறாள்.
வேண்டிய போதின்பம் விளைக்கும் மடந்தையரைத்
தீண்டிய கையாலெனைத் தீண்டாதே - பாண்டியா!
முல்லைக் கதிபா! முகம்பார்த்து அகலநின்று
சொல்லக் கடவதாம் சொல்! (தனிப்பாடல்)