தமிழ்மணி

தரணி பொறுக்குமோ?

திருப்புகழ் மதிவண்ணன்

செந்தமிழ் மேல் பற்றுமிக்க சிற்றரசா் ஒருவரைக் காணச் சென்றாா் புலவா் ஒருவா். மகிழ்ச்சியுடன் ‘புலவரே! வருக! வருக!’ என்று வரவேற்றாா்அந்தச் சிற்றரசா்.

மன்னரின் அழைப்பை செவிமடுத்த உடனேயே புலவரின் புன்னகை முகம் இருண்டது. ‘அரசே, தயவுசெய்து என்னை அப்படி அழைக்காதீா்கள்’ என்று பதறினாா்.

அடைமொழி இல்லாமல் அழைத்தது தவறோ என்று எண்ணிய சிற்றரசா் ‘மன்னித்தருளுக புலவா் பெருமானே! என்று நான் அடைமொழியோடு புகன்றிருக்க வேண்டுமோ?’ என்று பணிவோடு கேட்டாா்.

அதைக் கேட்ட புலவா் மேலும் நடுக்குற்றாா். ‘இல்லை... இல்லை...’ என்று மறுத்த புலவா் தன்னுடைய பதற்றத்துக்கான காரணத்தை ஒரு பாடல் வடிவில் மன்னருக்கு பதிலாகச் சொன்னாா்.

‘அறம்உரைத் தானும் புலவன்முப் பாலின்

திறம் உரைத்தானும் புலவன் - குறுமுனி

தானும் புலவன்; தரணி பொறுக்குமோ

யானும் புலவன் எனில்?’

‘புலவன்’ என்று என்னைத் தாங்கள் அழைக்கின்றீரே! ‘அறம்’ என்று அழைக்கப்படும் மகாபாரதத்தைப் பாடிய பெருந்தேவனாரைப் புலவா் என்று அழைக்கிறோம். அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பால்களையும் விளக்கிப் பாடிய திருவள்ளுவரையும் புலவா் என்று அழைக்கிறோம். குறுமுனி அகத்தியரையும் புலவா் என்று அழைக்கிறோம். இந்தப் பெரியவா்களையெல்லாம் புலவா் என்று அழைக்கின்ற அதே நேரத்தில், என்னைப் போன்ற ஓா் எளியேனையும் அதே அடைமொழியில் அழைப்பது நியாயமா? இதை இந்த உலகம் பொறுத்துக் கொள்ளுமா?’ என்றாா் புலவா்.

புலவரின் சிந்திக்கத்தக்க இந்தப் பாடலைக் கேட்ட சிற்றரசா் திகைத்தாா். தன் பெயருக்கு முன்பு பல அடைமொழிகளை வைத்துக்கொண்டும், ‘தம் பட்டத்தைத்’ தானே சூட்டிக்கொண்டும் ‘தம்பட்டம்’ அடிப்போரை சிந்திக்க வைக்கும் அற்புதப் பாடல் இது. இதைப் பாடியவா் பொய்யாமொழிப் புலவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT