உருப்பளிங்கு
கம்பர் இயற்றிய "சரஸ்வதி அந்தாதி'யில் வரும் காப்புச் செய்யுள் இது:
கம்பர் இயற்றிய "சரஸ்வதி அந்தாதி'யில் வரும் காப்புச் செய்யுள் இது:
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள்என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள்இங்கு வாராது இடர்.
இதில் வரும் "உருப்பளிங்கு' என்ற சொல் வியப்புக்குரியது. உருவத்தைக் காட்டும் கண்ணாடிபோல், கலைமகள் மேனி இருப்பதாகக் கம்பர் சொல்கிறார். இதை எதிரொலிப்பது போல் திரைப்பாடல் ஒன்றும் உண்டு.
"படைத்தானே பிரம்ம தேவன்' எனத் தொடங்கும் அப்பாடலில், "அந்தக் கண்ணாடி நீ பார்க்கும் கண்ணாடியா? இல்லை, உன் மேனி அது பார்க்கும் கண்ணாடியா?' என்று கவிஞர் கேட்டிருப்பார்.
உருவத்தைக் காட்டும் பொருள் வள்ளுவர் காலத்திலும் உண்டு. பொதுவாக அதற்குப் "பளிங்கு' என்று பெயர். அதனால்தான் அவர்" அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்' என்ற திருக்குறளை எழுதியுள்ளார்.
நாம் பொதுவாகச் சொல்லும் கண்ணாடி என்பதில் முகம் பார்க்கிறோம். ஆடி என்பதுதான் பொதுச்சொல். அச்சொல்லில் முன் ஒட்டு சேர்த்துக் கண்ணாடி என்றும், மூக்குக் கண்ணாடி என்றும், முகம் பார்க்கும் கண்ணாடி என்றும் பலவாறு அழைக்கிறோம்.
பின்புறத்தில் வேதிப்பொருள் பூசப்பட்ட ஆடியை முகம் பார்க்கும் கண்ணாடி என்று சொல்கிறோம். அதைத்தான் ஆங்கிலத்தில் "மிர்ரர்' என்கிறார்கள்.
ஒளிபுகும் ஆடியை, அதாவது, தெள்ளிய (டிரான்ஸ்பரன்ட்) ஆடியை "கிளாஸ்' என்று சொல்கிறார்கள். மிர்ரர் என்பதற்கும் கிளாஸ் என்பதற்கும் சேர்த்தே நாம் கண்ணாடி என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகிறோம்.
பல காலமாகப் புழக்கத்தில் வந்துவிட்டதால் அவ்வாறே பயன்படுத்தலாம்.
கண்ணாடி என்ற சொல், கண்ணுக்கு அணியும் ஆடி என்றும், கண்ணால் காணும் ஆடி என்றும், கண்ணைக் காட்டும் ஆடி என்றும் விரிந்து பொருள்கள் தரும். உருவத்தைக் காட்டும் ஆடி என்று நேரடியாகப் பொருள் தரவில்லை. முகம் பார்க்கும் ஆடியை அல்லது உருவத்தைக் காட்டும் ஆடியைக் குறிப்பதற்கு மிகவும் பொருத்தமாக உருப்பளிங்கு என்ற சொல் உள்ளது. அதனால்தான் கம்பனைச் சொற்கடல் என்று சொல்கிறார்களோ..?