முகப்பு
தமிழ்மணி

தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்

பதினாறு பேறுகளும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க' என்று மங்களகரமாக மக்களை, குறிப்பாக மணமக்களை வாழ்த்துவது தொன்றுதொட்டு இருந்து வரும் நம் தமிழர்களின் மரபாகும்.

Updated On : 11 ஜனவரி 2026, 7:30 pm IST
பகிர்:

கலாவதி சிவகுமாரன்

'பதினாறு பேறுகளும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க' என்று மங்களகரமாக மக்களை, குறிப்பாக மணமக்களை வாழ்த்துவது தொன்றுதொட்டு இருந்து வரும் நம் தமிழர்களின் மரபாகும். அந்த பதினாறு பேறுகளும் பல்வேறு தெய்வப் பதிகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அபிராமி பட்டர் 100 பாடல்களான அபிராமி அந்தாதி மட்டுமின்றி அபிராமி அம்மைப் பதிகங்களை 2 பாகங்களாகப் பாடுகின்றார். பதிகத்தின் முதல் பாகத்தில் முதல் பாடலும் இரண்டாம் பாகத்தில் இறுதிப் பாடலும் பதினாறு பேறுகளையும் கூறுபவைகளாக உள்ளன.

Advertisement

Advertisement

அபிராமி அம்மைப் பதிகத்தின் முதல் பாடல்

'கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்

கபடு வாராத நட்பும்,

கன்றாத வளமையும், குன்றாத இளமையும்,

கழுபிணி இல்லாத உடலும்,

சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,

தவறாத சந்தானமும்,

தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்,

தடைகள் வாராத கொடையும்,

தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு

துன்பம் இல்லாத வாழ்வும்.....

.........

நோயின்மை, கல்வி, தனதானியம், அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலி, துணிவு, வாழ்நாள், வெற்றி, ஆகுநல்லூழ், நுகர்ச்சி, தொகை தரும் பதினாறு பேறுகளும் தந்தருளி நீசுகானந்த வாழ்வளிப்பாய்!

அவ்வாறே அபிராமி அம்மைப் பதிகப் பாடல்கள் அல்லாத வைத்தீஸ்வரன் கோயில் (புள்ளிருக்கு வேளூர்) தலத்து அம்மையான தையல்நாயகியின் மேல் பாடப்பெற்ற பதிகத்தின் ஒரு பாடலில் பதினாறு பேறுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன...

'மனம் உவந்து உனது திருமலரடி

நினைப்பவர்...

..........

அழகு, அறிவு, வயது, இன்பம், ஊழ்,

சிறந்த புகழ், பெருமை, இளமை,

தீண்டிடும் நோயின்மை, கல்வி,

குணம், சந்தானம், சீர் வெற்றி, துணிவு, தானியம்

தனம் என்னும் பதினாறு பேறும் தந்தருள் புரியும்

சங்கரி! சர்வேஸ்வரி! சந்ததமும் வேளூர் தலம்,

உறைந்தருளும் உமை தையல் நாயகி அம்மையே!

அதுபோன்றே வைத்தீஸ்வரன் கோயில் முருகப் பெருமானாகிய செல்வ முத்துக் குமாரசுவாமியின் மேல் பாடப் பெற்ற 'முத்துக்குமாரசுவாமி திருவருட்பா'வில் ஒரு பாடலிலும் பதினாறு பேறுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்வி, தனம், தான்யம், சந்தானம், துணிவு, அழகு,

பெருமை, இளமை, தோன்று புகழ், அறிவு, நோயின்மை, வயது,

இன்பம், ஊழ், தூயகுலம் வெற்றியாகும்....

இவ்வாறு பதினாறு பேறுகளும் பல்வேறு தெய்வப் பதிகங்களில் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.