முல்லைப்பாட்டில் நற்சொல் கேட்டல்!
தெய்வத்தை வழிபடும்போது அந்தப் பக்கமாக செல்வோர் கூறும் சொல் தமக்கு நேர்மறையாக இருந்தால், தாம் நினைப்பது நிறைவேறும் என்றும், எதிர்மறையாக இருந்தால் தமது விருப்பமும் வேண்டுதலும் நிறைவேறாது என்றும் சங்ககால மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்.
முனைவர் க. விநாயக மூர்த்தி
தெய்வத்தை வழிபடும்போது அந்தப் பக்கமாக செல்வோர் கூறும் சொல் தமக்கு நேர்மறையாக இருந்தால், தாம் நினைப்பது நிறைவேறும் என்றும், எதிர்மறையாக இருந்தால் தமது விருப்பமும் வேண்டுதலும் நிறைவேறாது என்றும் சங்ககால மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்.
பழந்தமிழர்கள் தம் வாழ்வில் ஏதேனும் ஒரு வருத்தம், ஒரு தடங்கல், ஒரு பிரிவு, ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்போது அது கைகூடுமா? எனத் தெரிந்து கொள்வதற்காகக் கேட்கப்படுவது விரிச்சியாகும். இதை நற்சொல் கேட்டல் எனவும் வழங்குவர்.
ஏதேனும் ஒரு காரியத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது அருகில் இருந்து திடீரென மணியோசை கேட்டால் அது நல்ல சகுனம் என்றும், அதுவே நாயொன்று அங்கே ஊளையிட்டால் (அழுதால்) கெட்ட சகுனம் என்றும் நம்பினர். இத்தகைய வழக்கத்தை, பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை
------
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப
எனும் முல்லைப்பாட்டு அடிகளால் அறியலாம்.
போர் காரணமாக வேனிற் காலத் தொடக்கத்தில் பிரிந்து சென்று, கார்காலத் தொடக்கத்தில் மீண்டும் உன்னிடம் வந்து சேர்ந்து விடுவேன் என்று கூறிச் சென்ற தலைவனை நினைத்து நினைத்து வருத்தமுறுகிறாள் தலைவி. தோழிகள் பல்வேறு வகையில் பேசி ஆறுதல்படுத்துகின்றனர்; முதுபெண்டிரும் "நீ தலைவன் வரும்வரை ஆற்றியிருப்பாயாக' எனக் கூறினர். அதற்கும் அவள் உடன்படாதபடி இருந்தாள்.
எனவே, தலைவிக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் பொருட்டு முதுபெண்டிர் விரிச்சிக் கேட்கச் செல்கின்றனர். பழைமையான ஊர் அருகே உள்ள யாழ் போன்று இனிமையாக வண்டுகள் ஒலிக்கின்ற அந்த மாலைப் பொழுதில் நெல்லையும் நல்ல மனமுடைய நாழியளவு முல்லைப் பூவையும் சேர்த்துத் தூவி திருமால் கோயிலில் கை தொழுதபடி நற்சொல் கேட்டு முதுபெண்டிர் நின்றனர்.
அப்போது, அங்கே மாட்டுக் கொட்டகையில் உள்ளே இடையர்குலச் சிறுமி ஒருத்தி குளிரால் நடுங்கியபடி, தோள்மேல் தன் கைகளைக் கட்டிக்கொண்டு பால் உண்ணாமல் பசியால் வருந்தும் பச்சிளங்கன்றுகளைத் தடவியபடி வளைக்கோலை கையிலே வைத்துள்ள கோவலர் பின்னே ஓடிவர, மேய்ச்சலை முடித்துக் கொண்டு இப்போதே உன் தாகத்தைத் தீர்க்கும் தாய்ப் பசுவானது வந்து விடும். அதுவரையில் நீ வருந்தாதே எனக் கூறினாள். இதனை,
...கைய
கொடுங்கோற் கோவலர் பின்னின்றுய்த்தர
இன்னே வருகுவர், தாயர்
எனும் முல்லைப்பாட்டு வரிகளால் அறியலாம்.
இடையர்குலச் சிறுமி சொல்லிய இச்சொல்லே விரிச்சிக் கேட்டு நின்ற முதுபெண்டிர்க்கு நம்பிக்கை வார்த்த சொல்லாக அமைந்தது எனலாம்.
இதை தலைவியின் இருப்பிடத்துச் சென்று முதுபெண்டிர்தாம் இடையற்குலச் சிறுமியிடம் கேட்டதாகக் கூறி போருக்குச் சென்ற தலைவன் வெற்றி வாகையுடன் விரைந்து வந்து விடுவான்; எனவே, நீ கவலை நீக்கி இருப்பாயாக என்றனர்.
இவ்வாறாக தலைவி காத்திருந்த வேளையில், அவள் மனதுக்கு ஆறுதலாக ஏதாவது நற்சொல் காதில் விழாதா என அதையே நல்ல சகுனமாகக் கொண்டு நம்பிக்கையுடன் இருக்கும் தமிழர்தம் வழக்கம் முல்லைப்பாட்டில் இடம்பெற்றுள்ளது.