நம்பிக்கைதான் வாழ்க்கை!
இன்று வாழ்வைக் கண்டு மக்கள் அஞ்சி ஓடுகின்றனர். நிஜத்தை சந்திக்கப் பயந்து மது பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். தீர்மானங்கள் எடுப்பதற்குப் பயந்து, கண்டுகொள்ளாத் தன்மைக்குப் பலியாகின்றனர். கஷ்டங்களுக்கு ப
இன்று வாழ்வைக் கண்டு மக்கள் அஞ்சி ஓடுகின்றனர். நிஜத்தை சந்திக்கப் பயந்து மது பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். தீர்மானங்கள் எடுப்பதற்குப் பயந்து, கண்டுகொள்ளாத் தன்மைக்குப் பலியாகின்றனர். கஷ்டங்களுக்கு பயந்து பொறுப்புகளைச் சுமந்துகொள்ள அஞ்சுகின்றனர். இவை யாவும் குழப்பத்தின் அடையாளங்களே! இதனால் பலர் மனக்காயங்களுக்கு ஆளாகி உடைந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றனர்.
இதற்குக் காரணம் என்ன? நம்பிக்கையற்ற சூழ்நிலையிலிருந்து வெளிவர வழி உண்டா?
நீங்கள் துன்பம் என்னும் பள்ளத்தாக்கில் இருக்கின்றீர்களா? கெட்ட செய்திகளால் வாழ்வை இழந்து போயிருக்கின்ற உங்களுக்கு இயேசுவைப் பற்றிய செய்தி நற்செய்தியாக வந்து விடியும் என்று நம்பு. ஏனெனில் இருளில் நடப்பவருக்குத்தான் நட்சத்திரம் நம்பிக்கையாகத் தெரியும்.
நீங்கள் காணாத ஒன்றை நம்புவதுதான் நம்பிக்கை! நீங்கள் அனைத்தையும் கண்கூடாகக் காணமுடியுமென்றால் நம்பிக்கைக்கு அங்கு இடமில்லை. நீங்கள் பார்க்கிற அளவுக்குத்தான் ஒருவரை நம்புவீர்கள் என்றால் நீங்கள் உண்மையில் அந்த நபரை நம்பவேயில்லை என்று அர்த்தம்.
கடவுளை நம்புவது என்பது நாம் அவரைத் தெளிவாய்க் காண்கிறோம் என்பதாக அர்த்தமல்ல! மாறாக, ஏதும் தெளிவாய்த் தெரியவில்லை என்ற நிலையிலும் ஆண்டவரின் வழிகள் நல்லதும் தூய்மையானதுமாக இருக்கும் என்று நம்புவதில்தான் கடவுள் நம்பிக்கை அடங்கியுள்ளது. பெரும் போராட்டங்களிலிருந்து சிலர் தூய்மைப்படுத்தப்பட்டு வெற்றி வாகையோடு வெளிவருகின்றனர். மற்றவர்கள் முந்தைய நிலையை விட மோசமாக வெளிவருவதற்குக் காரணம் என்ன? முந்தையவர்களுக்கு நம்புவதற்கு ஒருவர் இருக்கின்றார்; பிந்தையவர்களுக்கு நம்புவதற்குத் தன்னைத் தவிர வேறொருவரும் இல்லை!
நீங்கள் பிறரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, துன்பம் பற்றி கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் அணுகுமுறையும் நம்பிக்கையற்றவர்களின் அணுகுமுறையும் வேறுபட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.
நம்பிக்கையற்ற மனிதன் இரண்டு உலகப் போர்களின் காட்டுமிராண்டித்தனங்கள், அறநெறி வாழ்க்கை மறக்கப்பட்ட சூழ்நிலை ஆகிய உலக வரலாற்றின் இருண்ட பக்கங்களைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டுப் போய்விடுவான். ஆனால், கடவுள் மீது நம்பிக்கை வைப்பவன் இதற்கெல்லாம் ஆச்சரியப்பட மாட்டான். அவனுக்கு சூரியன் என்றும் போலவே உதிப்பான். ஏனெனில், ""ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்'' (திருப்பாடல்கள்: 127:1) என்பது நம்பிக்கையுள்ளவனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரியும்.
இயேசு கூட வேதனையின் உச்சத்தில், ""என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்'' என்று கூக்குரலிட்டார்.
ஆனால், இறுதியில் வெற்றி வீரராகக் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்து வந்தார்.
அதுபோலத்தான் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு என்றும் துன்பமில்லை. அவர்கள் எல்லாவகைத் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு வெற்றி வீரர்களாகப் பவனி வருவார்கள். அவர்களைக் கண்டு மற்றவர்களின் மனத்திலும் நம்பிக்கை என்ற விதை துளிர்க்கும்.
கடவுள்மீது நம்பிக்கை கொண்ட தூய பவுலடியாரின் விசுவாசத்தைப் பாருங்கள் - ""நம் ஆண்டவர் இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை'' (உரோமையர் 8:37-38).