முகப்பு
வெள்ளிமணி

பெரியகோவில் பேரருளாளன்!

தொண்டை மண்டலத்தில் சுமார் 600 வருடங்கள் பழமையான பெருமாள் ஆலயம் சீர்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சியிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ளது பெரிய கோவில் என்ற கிராமம். செய்யாறு பேருந்து நிலையத்திலிருந்த

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:03 PM
பகிர்:

தொண்டை மண்டலத்தில் சுமார் 600 வருடங்கள் பழமையான பெருமாள் ஆலயம் சீர்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சியிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ளது பெரிய கோவில் என்ற கிராமம். செய்யாறு பேருந்து நிலையத்திலிருந்து கீழ்புதுப்பாக்கம் வழியாக 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்குள்ள ஸ்ரீபெருந்தேவி நாயிகா சமேத நித்ய கல்யாண வரதப் பெருமாள் ஆலயம் விஜயநகரப் பேரரசர்களால் பராமரிக்கப்பட்டது. காலப்போக்கில் கவனிப்பாரின்றி ஆலயம் சிதிலமடைந்தது. உற்ஸவ விக்ரகங்கள் களவாடப்பட்டன. 1980ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை ஆலயமே மூடப்பட்டு, பெருமாளுக்கு நித்ய ஆராதனைகள் நடைபெறாமல் இருந்தது. குட முழுக்கு என்ற வைபவமே காணாமல் 100 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆலயம் பாழடைந்த நிலையிலும் தன் சாந்நித்யம் குறையாமல் அடியார்களுக்கு அருள் பொழிகிறார் வரதர். கையில் கதையுடன் சங்கு - சக்கர தாரியாய் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் அருள் புரியும் அழகை பார்த்துக்கொண்டே இருக்கலாம். இஞ்சிமேடு அழகிய சிங்கரும் முக்கூர் அழகிய சிங்கரும் இப்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்கள். இன்றும் திருமண பிராப்தி வேண்டியும், புத்திர பாக்கியம் வேண்டியும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பெருமாளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். வரதன் என்ற திருநாமத்திற்கு ஏற்ப பேரருளாளனாக திகழ்கிறார் இந்தப் பெருமான்.

இந்நிலையில் ஊர்மக்களும், ஆன்மிகத் தொண்டர்களும் ஒன்று சேர்ந்து "நித்ய கல்யாண வரதர் டிரஸ்ட்' என்ற அமைப்பினை ஏற்படுத்தி ஆலய திருப்பணி வேலைகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது மூலவர் சந்நிதி விமானம், தாயார் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, ஆஞ்சநேயர் சந்நிதி ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. புதிய உற்ஸவ விக்ரகங்கள் செய்விக்கப்பட்டுள்ளன. நிதிப் பற்றாக்குறை காரணமாக திருப்பணி வேலைகள் மீதமுள்ள நிலையில் வருகிற 12ஆம் தேதி காலை 9 மணிக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. பூர்வாங்க ஹோம பூஜைகள் வருகிற 10ஆம் தேதி ஆரம்பமாகின்றன. மேலும் தகவலுக்கு: 9444376082.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.