திருக்குர்ஆனில் நீதி போதனைகள், உலக மக்களை விளித்தே விளம்பரப்படுத்தப்படுகின்றன. நபிகள் நாயகத்தின் தோழர்கள் அல்லது எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களைச் சந்தித்து சந்தேகம் கேட்போர் விளக்கம் பெறுவதற்கும், சில சந்தர்ப்பங்களில், சூழ்நிலைகளில், நெருக்கடியான நேரங்களில் ஏகத்துவத்தை ஏற்றோர் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கும் ஏற்ற வசனங்கள் வந்தன.
நபிகள் நாயகம்(ஸல்) இஸ்லாத்தைப் போதித்த ஆரம்ப நாட்களில், ஆண்கள் எத்தகைய தொல்லைகளையும் துன்பங்களையும் அடைந்தார்களோ, மக்காவை விட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்களோ, இன்னல்களுக்கு இடையிலும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்களோ அதுபோல பெண்களும் பேரிடர்களை சந்தித்தனர். ஆனாலும் கலங்காது நபிகள் காட்டிய வழியில் கருத்தூன்றி இறைவன் பொருத்தத்தை நாடி போராடும் ஆண்களுக்கும் போதிய உதவிகள் செய்து ஹிஜ்ரத்தையும் மேற்கொண்டனர். இஸ்லாமிய பிரச்சாரத்தையும் பிறழாது செய்தனர்.
அண்ணல் நபிகளாரின் மனைவி ஹஜ்ரத் உம்மு சலமா(ரலி) அவர்களுக்குப் பெண்களின் பெரும் பங்கைக் குறிப்பிடும் வசனங்கள் வான் முறை குர்ஆனில் இல்லையே என்ற ஆதங்கம். சாதகமான வேளையில் நபிகளாரிடம் நாயகி உம்மு சலமா (ரலி) ""அல்லாஹ்விற்காக நாட்டைத் துறந்து வந்த பெண்களைப் பற்றி அல்லாஹ் அறிவிக்கவில்லையே'' என்று கேட்டார்கள்.
அப்பொழுது ""உங்களிடமிருந்து ஆணோ அல்லது பெண்ணோ யாராயினும் ஆற்றிய நற்செயல்களை நான் வீணாக்க மாட்டேன்'' என்ற திருக்குர்ஆன் (3-195) வசனம் இறக்கப்பட்டது.
நற்கிரியைக்கு உரிய நற்பலன் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும் நல்ல சொர்க்கம். ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் கிடைக்கும். அல்லாஹ் அருளை அள்ளி வழங்குகையில் ஆண், பெண் பாகுபாடு பார்ப்பதில்லை. "நற்செயல்களுக்குரிய நற்பலன், செய்த நன்மையின் தன்மைக்கேற்ப ஆண், பெண் தரம் பிரிக்காது தரப்படும்' என்று இவ்வசனத்தில் அல்லாஹ் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறான்.
நன்மையைச் செய்வோம். நற்பலனைப் பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.