முகப்பு
வெள்ளிமணி

கல்வி தொடங்கும் நாள்!

நவராத்திரியின் பத்தாவது நாள் விஜயதசமி. ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் இருந்து

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

நவராத்திரியின் பத்தாவது நாள் விஜயதசமி. ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் இருந்து மறுநாள் விஜயதசமி அன்று காலை 9.00 மணிக்கு முன் பட்டினியிலிருந்து உணவு உண்டு விரதத்தை முடித்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் 8 நாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால், பழம் மட்டும் உட்கொள்ளலாம். விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப் பொருள்களைத் தயார் செய்து சக்திக்குப் படைத்து நவமியில் வைத்துள்ள புத்தகம், இசைக் கருவிகளைப் பாராயணம் செய்து குடும்பத்தில் உள்ளவர்களுடன் விரதத்தை நிறைவு செய்யலாம்.
 நவராத்திரியில் திருமகளை துதித்து வழிபடுவோருக்கு தேவியானவள் சகல நலன்களையும் நல்குவாள். வீடு பேறாகிய முக்தியை அளிப்பாள் என்று "காரணஆகமம்' கூறுகிறது. விரத காலங்களில் அபிராமி அந்தாதி, இலக்குமி தோத்திரம் (கனகதார தோத்திரம்), சகலகலாவல்லி மாலை, சரசுவதி அந்தாதி, சரசுவதி அஷ்டோத்தர சதநாமாவளி, சுப்பிரமணிய பாரதியாரின் சரசுவதி பாடல்கள் ஆகியவற்றைப் படித்தல் வேண்டும்.
 கோயில்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழையை வெட்டுவது வளமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்க முடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்தாள். அப்போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை அழித்து அரக்கனை அழித்தாள் என்பர். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அரக்கனை அழித்த நேரம் மாலை வேளை. செங்கட் பொழுதில் இதனை நினைவுபடுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம்.
 நவராத்திரியின் ஒன்பதாம் நாள் கலைமகள் வழிபாட்டில், கலைமகள் படத்தின் முன் புத்தகங்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். கல்வியின் சிறப்பை உணர்த்தவே இவ்வழிபாடு செய்யப்படுகிறது. இதேநாள் ஆயுத பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாள்களிலும் ஒன்பது வகையான பயறு வகைகள், பழங்களை அம்மனுக்குப் படைத்து, அவற்றை மற்றவர்களுக்கும் வழங்குவதை வழக்கமாகக் கொண்
 டுள்ளனர்.
 புரட்டாசி திங்களில் உடல் சோர்வைத் தரக்கூடிய நோய்க் காரணிகள் அதிகம் என்பதால் புரதச்சத்து நிறைந்த பயறுகளை உண்பதற்கான ஒரு பண்டிகையாகவும் நவராத்திரி வழிபாடு திகழ்கிறது.
 இந்த ஒன்பது நாட்களில் எந்தக் கெட்ட செய்திகளும் வராமலும், இடையூறுகள் நேராமலும் காத்ததற்குப் பத்தாம் நாளான விஜயதசமியன்று நன்றி சொல்லி வழிபடுவர்.
 அன்றைய நாளில் கொலு பொம்மைகளைக் கவனமாக எடுத்து வைத்துப் பாதுகாப்பர். இந் நாளைக் குழந்தைகளுக்குக் கல்வி தொடங்கும் நாளாகவும் கொண்டாடுவர்.
 கொலு வைத்துக் கொண்டாடப்படும் இந்த முப்பெருந்தேவியர் வழிபாடு அறிவியல் அடிப்படையிலும் நன்மையைத் தருகிறது.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments