மாம்பட்டு சுயம்புநாதருக்கு குடமுழுக்கு
சிவபெருமான் சுயம்பு மூர்த்தமாய் ஆலயம் கொண்டுள்ள திருத்தலங்களில் ஒன்று மாம்பட்டு.
சிவபெருமான் சுயம்பு மூர்த்தமாய் ஆலயம் கொண்டுள்ள திருத்தலங்களில் ஒன்று மாம்பட்டு. இறைவனும் சுயம்பு நாதேஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். இங்குள்ள 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் "தான்தோன்றீசுவரம் உடைய நாயனார் கோயில்'' என்றே இறைவனின் திருநாமம் குறிக்கப்படுகிறது. அம்பாளின் திருநாமம் பெரிய நாயகி.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் உள்ளது மாம்பட்டு கிராமம். போளூரிலிருந்து 4 கி.மீ. தொலைவு. படவேடு பகுதியில் ஆட்சி செய்த சம்புவராயர் என்பவரால் கி.பி. 1338இல் ஆலயம் கட்டப்பட்டு, பின்னர் வந்த சம்புவராய மற்றும் விஜயநகர மன்னர்களால் பராமரிக்கப்பட்டு நில தானங்கள் அளிக்கப்பட்டதை கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இவ்வூர் மக்கள் அனைவரும் சேர்ந்து கோயிலின் முன்மண்டபத்தை கட்டினர் என்பதையும், இறைவனுக்கு 27 விளக்குகளால் ஆன "நட்சத்திர மாலை விளக்கு ஏற்றுவதற்கு நில தானம் அளிக்கப்பட்ட செய்தியினையும் கல்வெட்டு கூறுகிறது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை இந்த ஆலயத்திலேயே காண விருப்பம் கொண்டு அண்ணாமலை, உண்ணாமுலை அம்மன் சந்நிதிகள் எழுப்பப்பட்டன. ஆலயத்தின் வெளிப்புறத்தில் 20 அடி உயரத்தில் தீபக்கல் ஸ்தூபியும் கல் அகலுடன் கட்டப்பட்டது. எனவே இரட்டை சிவப்பதியாக தற்போது விளங்குகிறது. ஒரு சிவாலயத்திற்கு உரிய அனைத்து சந்நிதிகளும் அமையப்பெற்ற இவ்வாலயத்தின் தல விருட்சம் வில்வமரம்.
காலத்தால் சிதிலமடைந்த இவ்வாலயத்தின் திருப்பணியை இந்து சமய அறநிலையத்துறை உதவியுடன் மாம்பட்டு கிராமத்தினர் மேற்கொண்டுள்ளனர். புதிதாக ஸ்ரீநிவாசப் பெருமாள், பத்மாவதி தாயார் சந்நிதிகளும், சூரிய பகவான் சந்நிதியும், தேவிமார்களுடன் கூடிய கல்யாண நவகிரகங்கள் சந்நிதியும் கட்டப்பட்டுள்ளன. திருப்பணிகள் மீதமுள்ள நிலையில் பல ஆண்டுகளுக்கு பின் செப்: 16ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
தகவலுக்கு: 97886 97495