ஞானம் தருவார்
அறிவைப் புகட்டும் வேத நூல்களுக்கு அபாயம் ஏற்பட்டபோது அதை மீட்பதற்காக உண்டானதே திருமாலின் ஹயக்ரீவ அவதாரம்.
அறிவைப் புகட்டும் வேத நூல்களுக்கு அபாயம் ஏற்பட்டபோது அதை மீட்பதற்காக உண்டானதே திருமாலின் ஹயக்ரீவ அவதாரம். குதிரை முகம் கொண்ட மது, கைடவன் என்னும் அரக்கர்களால் வேதங்கள் அபகரிக்கப்பட்டபோது அவர்களைப் போல் குதிரை முகமே கொண்டு அவர்களை மாய்த்து வேதங்களை மீட்டு, படைப்புக் கடவுளான பிரம்மனிடம் ஒப்படைத்தவர் ஹயக்ரீவப் பெருமான். இவரே வித்யைக்கு அதி தேவதையாக இருந்து தன்னை வணங்குவோர்க்கு ஞானமும், செல்வமும் ஒரு சேர அருள்புரிகிறார். கல்விக் கடவுள் என்று வழிபடப்படுகிறார்.
இவர் ஸ்ரீலட்சுமி பிராட்டியுடன் லக்ஷ்மி ஹயக்ரீவராகவும், யோக பீடத்தில் யோக ஹயக்ரீவராகவும் திருமால் ஆலயங்களில் கோயில் கொண்டுள்ளார். அவ்வகையில் யோக ஹயக்ரீவராக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செட்டிப்புண்ணியம் கிராமத்தில் அருள்மிகு தேவநாதப் பெருமாள் திருக்கோயிலில் உற்ஸவ மூர்த்தியாக வீற்றிருந்து கல்விக் கடவுளாக மிக்க சாந்நித்தியத்துடன் திகழ்கிறார். இந்த யோக ஹயக்ரீவப் பெருமானுக்கு ஸ்ரீவித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை ஜனவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க இந்த அர்ச்சனை நடைபெறுவது சிறப்பு.
அமைவிடம்: தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் சிங்கபெருமாள் கோயில் அருகில் உள்ளது இவ்வாலயம்.
தொடர்புக்கு: 99429 93770