மனிதனுக்குப் பகை புறத்தில் இல்லை. நமக்குள்ளே சத்துருக்கள் மலிந்து கிடக்கிறார்கள். பயம், சந்தேகம், சோம்பல் முதலான குணங்கள் நம்மை வெற்றியடையவொட்டாமல் தடுக்கின்றன.
- திருநாவுக்கரசர்
சுமையைத் தாங்கி அலுக்காமல் உழைக்க வேண்டும். வெயிலையும் குளிரையும் பாராட்டக் கூடாது. எப்போதும் ஆனந்தமாக இருக்க வேண்டும். இவை மூன்றையும் நீ கழுதையிடமிருந்து கற்றுக்கொள்.
- சாணக்கியன்
கல்லைக் குவித்துப் பெரிய கோயில்கள் ஏன் கட்டுகிறீர்கள்? இறைவன் உங்களுக்குள்ளேயே இருப்பதை அறியாமல் ஏன் தொல்லைப்படுகிறீர்கள்?
- யோகி வேமன்னா
யோகத்தின் முதல் படி பேச்சை அடக்குவதும், (அபரிக்ரகம்) தேவைக்கும் அதிகமாக வைத்துக்கொள்ளாமல் இருப்பதுமாகும்.
- விவேக சூடாமணியில் ஆதிசங்கரர்
செவிகள் இருந்தால் மாத்திரம் போதாது. பெரியோர்கள் சொல்லும் நல்லுபதேசங்களை அடிக்கடிக் கேட்டுச் செவியின் பயனைப் பெற வேண்டும். அப்போதுதான் கேட்கக்கேட்க இதுவரை விளங்காத பொருளும் முறையே உனக்குத் தெளிவாகிவிடும்.
- யோகி வேமன்னா
மது அருந்துபவன் தன் அறிவை மட்டுமல்ல, சுற்றம், உறவு, நண்பர்களையும் இழக்கிறான்.
- சாணக்கியன்
எப்போதும் வானத்திலே சுற்றும் பருந்துபோல் போக விஷயங்களினால் கட்டுப்படாமல், பரமாத்மாவை நோக்குவதுதான் விடுதலையாகும்.
- குள்ளச் சாமியார்
உடலில் புண் அல்லது கட்டி தோன்றினால் அதை மறைத்து மூடி வைக்கமாட்டார்கள். மருத்துவர்கள் மூலம் அறுவை சிகிச்சையால் அதைக் களைந்து, குணப்படுத்திக்கொள்வார்கள். அதுபோன்று வெளியிலே நண்பர்களைப் போலப் பேசிப் பழகி, உள்ளுக்குள்ளேயே பகையுணர்வால் புழுங்கிக் கொண்டிருப்பவர்களிடம் அவர்களின் எண்ணத்தை வெளிப்படையாகக் கூறி, அவர்களிடமிருந்து விலகி வாழ்வது நல்லது.
- குமரகுருபரர்
(நீதிநெறி விளக்கம் 55)
எவனொருவன் எப்பொழுதும் தூய வார்த்தைகளையே பேசுகிறானோ, கர்வமும் தற்பெருமையும் இல்லாதவனாய் இருக்கிறானோ, அவனே உண்மைப் பொருளாகிய இறைவனை அடைகிறான். உண்மை, உலகப்பற்றின்மை, அன்பு ஆகிய நற்குணங்கள் உடையவனாய் இரு.
- கபீர்தாசர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.