முகப்பு
வெள்ளிமணி

தீர்க்கதரிசி எலியா காட்டிய வழி

கடன் வாங்காதவர் இல்லை. வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுப்பது நல்லது. வட்டி மட்டும் கட்டி அசல் செலுத்த முடியாமல் போகும் நிலை வரும்போது வாழ்வு மிகவும் கடினமாகும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
பகிர்:

கடன் வாங்காதவர் இல்லை. வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுப்பது நல்லது. வட்டி மட்டும் கட்டி அசல் செலுத்த முடியாமல் போகும் நிலை வரும்போது வாழ்வு மிகவும் கடினமாகும்.
கடனும் வட்டியும் கட்டுவதற்கு முடியாதவர்கள் தங்கள் சொத்துகளை இழக்க நேரிடும். "கடன் கொடு; ஆனால் கடன் வாங்காதே' என்னும் முதுமொழிக்கு ஏற்ப முடிந்தவரை கடன் வாங்காமல் இருப்பது நன்மையளிக்கும். தன் வருமானத்துக்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.
வேதாகமத்தில் கடன்பட்டு கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் மரித்துப்போன ஒருவரின் கடன்களை அவரின் மனைவியும், பிள்ளைகளும் ஏற்க வேண்டிய நிலை உண்டானது.
அந்த இக்கட்டான சூழ்நிலையில் கணவனை இழந்த அந்தப் பெண்மணியும், அவளின் பிள்ளைகளும் கடன் தீர்க்க வழி தேடி தீர்க்கதரிசி எலியாவிடம் வந்தார்கள்.
""என் கணவன் வாங்கிய கடன் அசலும், வட்டியும் சேர்ந்து ஒரு பெரும் தொகையாக ஆகியிருக்கிறது. 
கடன் கொடுத்தவர் வந்து அசலும், வட்டியும் கேட்டு நெருக்கடி கொடுக்கிறார். என்னிடத்தில் சொத்துகள் எதுவும் இல்லை. அதனால் என் இரண்டு ஆண் பிள்ளைகளையும் அடிமையாக அனுப்பும்படி கடன் கொடுத்தவர் கேட்கிறார். கடனை அடைக்க நீங்கள்தான் உதவ வேண்டும்'' என்று வேண்டினாள் (ஐஐ இராஜாக்கள் 4.1).
மரித்துப் போனவர் மிகவும் நல்லவர். தெய்வ பக்தி உள்ளவர். மரித்துப் போனவரின் கடனை அடைப்பது மிகவும் நற்செயல். கடனை அடைக்க வழியில்லாமல் பிள்ளைகளை அடிமையாகக் கொடுப்பது மிகவும் பாவச்செயல்.
தீர்க்கதரிசி எலியா அப்பெண்ணைப் பார்த்து ""உன்னிடத்தில் என்ன உள்ளது?'' என்று கேட்டார். ""என்னிடம் பணமோ, ஆபரணமோ, நிலமோ ஒன்றுமில்லை'' என்றாள் அப்பெண். பிறகு நினைவுக்கு வந்தவளாய் ""என் வீட்டில் ஒரு குடம் ஆலிவ் எண்ணெய் உள்ளது'' என்றாள். 
தீர்க்கதரிசி எலியா சொன்னார் ""நீ உன் வீட்டுக்குச் செல். அக்கம் பக்கத்து வீடுகளில் காலிப் பாத்திரங்களைக் கடன் வாங்கு. எவ்வளவு பாத்திரங்கள் சேகரிக்க முடியுமோ அவ்வளவு பாத்திரங்களையும் சேகரித்த பின், நீயும் உன் பிள்ளைகளும் வீட்டுக்குள் இருந்தபடி கதவு ஜன்னல்களை மூடிவிடவேண்டும். பிறகு தெய்வத்தை நினைத்து எண்ணெய் உள்ள குடத்தை எடுத்து காலி பாத்திரங்களில் நிரப்ப ஆரம்பி. நீ வைத்திருக்கும் அனைத்துப் பாத்திரங்களிலும் ஆலிவ் எண்ணெய் நிறைந்துவிடும். பிறகு வந்து என்னைப்பார்'' என்றார்.
அப்பெண்ணும் அப்படியே வீடு முழுவதும் காலி பாத்திரங்களை வாங்கி வைத்தாள்.
தீர்க்கதரிசி எலியா கூறியபடி கதவு ஜன்னல்களை மூடினாள். பின்னர் தன் பிள்ளைகளின் உதவியோடு எண்ணெய் இருந்த குடத்திலிருந்து ஒவ்வொரு காலி பாத்திரமாக எண்ணெயை ஊற்றினாள். 
என்ன அற்புதம்! அந்த ஒரு குடத்தில் இருந்த எண்ணெய் எல்லா காலி பாத்திரங்களிலும் எண்ணெயை நிரப்பிக் கொண்டே வந்தது.
வீடு முழுவதும் வைத்திருந்த எல்லா பாத்திரங்களும் நிரம்பிவிட்டன. அப்பெண் மிகவும் சந்தோஷமாக ""வேறு பாத்திரம் இருக்கிறதா?'' என்று பிள்ளைகளிடம் கேட்டாள். 
""இல்லை'' என்று சொன்னார்கள். 
வீட்டின் கதவை மூடும் போது எல்லாம் காலி பாத்திரங்களாக இருந்தன. இப்பொழுது வீட்டைத் திறக்கும்போது எல்லா பாத்திரங்களும் நிரம்பியிருந்தன.
அப்பெண் நேராக தீர்க்கதரிசி எலியாவிடம் ஓடி வந்தாள். நடந்தவற்றைக் கூறினாள்.
""அற்புதம் தெய்வத்தால் நடந்துள்ளது! நீ எண்ணெய் விற்று கடனை அடைத்து விடு. மேலும் கிடைக்கும் பணத்தைக் கொண்டு உன் வாழ்க்கையை அமைத்துக் கொள்'' என்றார் எலியா தீர்க்கதரிசி.
இது உண்மையாய் நடந்த அற்புதம். இறைவன் இன்றும் நமக்கு உதவி செய்கிறார்.
இறைவனை முன்வைத்து பக்தியுடன் செய்யும் எந்தச் செயலையும் அவர் பல மடங்கு பெருகச் செய்கிறார். இறைவன் நம் வாழ்வில் என்றும் துணையாக இருக்கிறார்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.