இந்த முறை சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்: அஜிங்க்யா ரஹானே
ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பில் இருக்கும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பில் இருக்கும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் நடப்பு சாம்பியனாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணிக்கு அஜிங்க்யா ரஹானே புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், கடந்த சீசன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சிறப்பான சீசனாக அமையவில்லை. 14 போட்டிகளில் விளையாடி வெறும் 5 போட்டிகளில் மட்டுமே கேகேஆர் வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தது.
இந்த நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பில் இருக்கும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு வீரராகவும், கேப்டனாகவும் ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு வெவ்வேறு விதமான சவால்கள் இருக்கும். ஒரு வீரராகவும், கேப்டனாகவும் என்னுடைய பயணத்தில் நான் கற்றுக் கொண்டது என்னவென்றால், எந்த மாதிரியான சவால்கள் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் நாம் மிகவும் நேர்மறையாக இருக்க வேண்டும் என்பதே நான் கற்றுக் கொண்டது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கடந்த ஆண்டிலிருந்து கேப்டனாக வழிநடத்தி வருகிறேன். கொல்கத்தா அணியை வழிநடத்தும் பொறுப்பை எனக்கு வழங்கியதற்காக அணி நிர்வாகத்துக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். எப்போதும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் இரண்டுமே இருக்கும். நாம் எப்போதும் நமக்கான வாய்ப்புகளை மட்டுமே பார்க்க வேண்டும்.
எனக்கான வாய்ப்புகள் என்ன இருக்கிறது என்பது குறித்தே என்னுடைய கிரிக்கெட் பயணம் முழுவதும் சிந்தித்துள்ளேன். எனக்கு முன்னே ஏதேனும் சவால்கள் இருப்பின், அதனை நான் நேர்மறையாகவே அணுகுவேன். அந்த சவாலை ஒரு நல்ல வீரராகவும், கேப்டனாகவும் திறம்பட எதிர்கொண்டு என்னுடைய சிறந்த பங்களிப்பை வழங்குவேன். எதிர்வரும் ஐபிஎல் சீசனை நாங்கள் மிகவும் நேர்மறையாக தொடங்க வேண்டும் என்றார்.
வருகிற மார்ச் 29 ஆம் தேதி மும்பை வான்கடே திடலில் நடைபெறும் தனது முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.