வேதாகமத்தில் தரியு என்னும் அரசர்தானியேல் என்ற யூத அடிமையை தன்னிடம் அமைச்சராகச் சேர்த்துக் கொண்டார். தானியேல் சிறுவனாக இருந்த பொழுது தரியு அரசரால் தேர்வு செய்யப்பட்ட நூறு பேரில் ஒருவர். அவர் கல்வி கற்றவர், தெய்வ பக்தி உள்ளவர், உண்மையானவர், தெய்வ ஆவி அவரோடு இருந்தது.
அரசர் தனது அரசாங்கத்தில் தனக்கு நஷ்டம் வராதபடி நாட்டின் கணக்கு வழக்குகளைப் பார்க்கும் பொறுப்பை தானியேலிடம் ஒப்படைத்தார். இதை விரும்பாத மற்ற அமைச்சர்களும் அதிகாரிகளும் தானியேலை எப்படியாவது சமயம் பார்த்து வீழ்த்திவிட வேண்டும் என்று திட்டம் தீட்டினர். அவரை கண்காணித்து வந்தனர். ஆனால் கணக்கு வழக்குகளில் அவரிடம் ஒரு குறையையும் காணமுடியவில்லை.
இதனால் அவரை சூழ்ச்சி செய்து ஒழித்து விட வேண்டும் என்று எதிரிகள் நினைத்தனர். தானியேல் தன் தெய்வமாகிய கர்த்தர் ஒருவரை மட்டுமே தொழுவார்; மற்ற தெய்வங்களை அவர் வணங்கவும், தொழவும் மாட்டார்.
இதையறிந்த டானியேலின் எதிரிகள் அரசரிடம் சென்று ""ராஜாவே! இன்று தொடங்கி 30 நாள்களுக்கு நீங்கள்தான் எங்கள் கடவுள். இந்த 30 நாள்களும் நாட்டு மக்கள் அனைவரும் உங்களை மட்டுமே வணங்குவோம். அப்படி வணங்காதவரை சிங்கத்தின் கெபியில் (சிங்கங்கள் வசிக்கும் பாதாளக் குகை) தள்ளிவிட வேண்டும் என்று சட்டம் இயற்றவேண்டும்'' என்று வலியுறுத்தினர்.
அரசரும் மகிழ்ந்து அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.
இதை அறிந்தும் தானியேல் தினமும் மூன்று வேளையும் மேல்மாடியில் ஜன்னல்கள் திறந்திருக்க, மேற்கு நோக்கி, தம் கர்த்தரை தோத்திரப் பாடல்கள் பாடித் தொழுது வந்தார்.
இதைக் கண்ட எதிரிகள் "அரசனைத் தொழாத தானியேல் குற்றவாளி' என்று அவரைப் பிடித்தனர். தானியேலைக் காப்பாற்ற அரசர் முயற்சித்தும் பலனில்லை. தானியேல் சட்டத்தை மீறியதால் சிங்கத்தின் குகைக்குள் தள்ளப்பட்டார். அரசருக்கு அன்றிரவு முழுவதும் தூக்கம் வரவில்லை (தானியேல் - 6:18).
விடியற்காலையில் எழுந்து சிங்கத்தின் குகைக்குச் சென்று அதனை மூடி இருந்த அடைப்பைத் திறக்கச் செய்தார்.
பின்னர் குகையை எட்டிப் பார்த்து ""தானியேல்..! நீ தினமும் ஆராதிக்கின்ற உன் தேவன் உன்னைக் காப்பாற்ற
வல்லவராக இருந்தாரா?'' என்று
சத்தமாகக் கேட்டார்.
குகையிலிருந்து ""ஆம், ராஜாவே..! நான் தினமும் ஆராதிக்கின்ற என் தேவன் சிங்கத்தின் வாயைக் கட்டிப் போட்டு என்னைக் காப்பாற்றினார்; எனக்கு ஒரு தீங்கும் நேரவில்லை'' என்றார் தானியேல்.
அரசர் வியந்து தானியேலை மேலே தூக்கச் செய்து, அவருக்கு மீண்டும் அரச சபையில் பதவியைக் கொடுத்தார்.
தானியேலுக்கு எதிராக சூழ்ச்சி செய்தவர்களை சிங்கத்தின் குகைக்குள் தள்ளும்படி உத்தரவிட்டார். ""தானியேலின் தேவனே ஜீவனுள்ள தேவன். அவர் என்றென்றும் நிலைத்திருப்பார்'' என்றார் அரசர். தானியேல் தன் தேவனிடத்தில் கொண்ட மாறாத பக்தியினால் தேவன் அவரைக் காப்பாற்றினார். நாமும் மாறாத பற்றுறுதி கொண்டு இறைவனை சேவிப்போம்; வெற்றியுள்ள வாழ்வு வாழ்வோம். கர்த்தர்
என்றும் நம் துணை!