தேவிகாபுரம் பொன்மலை நாதர்
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பது முதுமொழி. அந்த வகையில் பழம்பெரும் கோயில்களுள் வரலாற்றுச் சிறப்பு மிக்கது..
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பது முதுமொழி. அந்த வகையில் பழம்பெரும் கோயில்களுள் வரலாற்றுச் சிறப்பு மிக்கது பெரியநாயகி அம்மன் சமேத "பொன்மலை நாதர்' என்னும் "கனக கிரீஸ்வரர்' ஆலயம். திருவண்ணாமலை மாவட்டத்தில், போளூர் நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் சேத்பட் செல்லும் பாதையில் உள்ளது தேவிகாபுரம்.
இவ்வூரில் மலை உச்சியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில், கலை நயம் மிக்க சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது இத்திருக்கோயில். கி.பி. 10}ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. 3.5 கி.மீ. சுற்றளவு கொண்ட பொன்மலை எனும் கனககிரி மலையில் அமர்ந்து அருள்பாலிப்பதனால் சிவபெருமானுக்கு "பொன்மலை நாதர்', "கனக கிரீஸ்வரர்' என்ற பெயர்கள் வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இக்கோயிலில் ஒரே கருவறையில் இரண்டு லிங்கங்கள் உள்ளன. அதில் ஒன்று சுயம்பு மூர்த்தி பொன்மலை நாதராகவும், மற்றொன்று ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காசி விஸ்வநாதராகவும் காட்சி அளிக்கிறது.
ஒருமுறை வேடன் ஒருவன் காட்டில் கிழங்குகளை தோண்டிக்கொண்டிருக்கும் போது, திடீரென ஓரிடத்தில் ரத்தம் வெள்ளமாகப் பாயத் துவங்கியது. பயத்தில் வேடன் உற்றுநோக்கும் போது அங்கிருந்த சுயம்பு லிங்கத்தின் மீது கோடரி பட்டு, ரத்தம் வருவது அறிந்து வேதனையுற்றான். ரத்தப் பாய்ச்சலைத் தடுக்க ஏதேதோ முயற்சி செய்தும் முடியாமல் போக, இறுதியில் வெந்நீர் ஊற்றி அபிஷேகம் செய்து காயத்தை ஆற்றினான் என்பது தல வரலாறு. அதன்படியே இன்றளவும் சிவபெருமானுக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
மற்றுமொரு சிறப்பு, இங்குள்ள சிவபெருமானை 365 படிகளைத் தாண்டி சென்றால் மட்டுமே காணமுடியும். பெüர்ணமி நாள்களில் இங்கு கிரிவலம் செய்து, சிவனை வழிபட்டு வந்தால் திருமணத் தடை உள்ளிட்ட பல்வேறு தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. ஆகவே இங்கு பெüர்ணமி நாள்களில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
மனத் துயரம் நீங்க பொன்மலை நாதரை வழிபடுவதும் இயல்பு. மொத்தத்தில் மந்திரம் ஜெபிக்க, மனமது செம்மை பெறும் இந்தத் திருத்தலத்தில் என்பது வெளிப்படை..!
மேலும் தகவலுக்கு: குருபிரசாத் குருக்கள் - 9952576444.