முகப்பு
வெள்ளிமணி

காரிகையர் கொண்டாடும் காரடையான் நோன்பு

பெண்களுக்கு அவர்களது மாங்கல்ய பாக்கியம் சிறக்க அம்பாளை பிரத்யேகமாக வழிபடும் இரண்டு தினங்களில் ஒன்று வரலட்சுமி விரத நாள், மற்றொன்று காரடையான் நோன்பு நாளாகும். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
பகிர்:

பெண்களுக்கு அவர்களது மாங்கல்ய பாக்கியம் சிறக்க அம்பாளை பிரத்யேகமாக வழிபடும் இரண்டு தினங்களில் ஒன்று வரலட்சுமி விரத நாள், மற்றொன்று காரடையான் நோன்பு நாளாகும். 

காரடையான் நோன்பு நாள் என்பது கற்பில் சிறந்தவளான சாவித்திரி தன் கணவன் சத்தியவானின் உயிரை எம தர்மனிடம் இருந்து மீட்ட நாளாகும். மார்க்கண்டேய முனிவர் பாண்டவர்களில் மூத்தவரான தர்மருக்கு பல கதைகள் கூறி வரும்போது "சத்தியவான் சாவித்திரியின் கதை'யையும் கூறியதாக புராணத்தில் உள்ளது. மாசியும், பங்குனியும் கூடும் நாளில் மேற்கொள்ளப்படும் இந்த நோன்பில் (விரதத்தில்) பெண்கள் பூஜை முடிந்த பிறகு "மஞ்சள் சரடு' கட்டிக்கொள்வர். இதனை "காமாட்சி பூஜை' அல்லது "காமாட்சி விரதம்' என்றும் சொல்வது வழக்கம்.

பூஜை முடிந்த பிறகு மஞ்சள் சரடு கட்டிக்கொண்டு பிரார்த்தனை செய்யும்போது அவசியம் கூறவேண்டிய வாசகம்:

"உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன்
ஒருகாலும் என்னைவிட்டு என் கணவன் 
பிரியாதிருக்க  வரம் வேண்டும் தாயே!'

பதிவிரதையான சாவித்திரிக்கென்று தனிக் கோயில் இல்லாத போதிலும் கொல்கத்தாவில் உள்ள காளிகாட் ஆலயத்தில் சத்தியவான் சாவித்திரிக்கென்று தனி சந்நிதி உள்ளது. அங்குள்ள சாவித்திரி சிலைக்கு பெண்கள் வளையல் சாத்தியும், குங்குமம் சமர்ப்பித்தும் வழிபாடு நடத்துகின்றனர். 

இந்த ஆண்டு காரடையான் நோன்பு மார்ச் 14-ஆம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் பங்குனி மாதப் பிறப்பு மாலை 5.56 மணிக்கு நிகழும். அதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக மஞ்சள் சரடு கட்டிக்கொள்ள வேண்டும். 

அன்று 4.30 மணி முதல் 6 மணி வரை ராகு காலம் ஆதலால், ராகு காலம் தொடங்கும் முன்னரே சரடு கட்டிக்கொள்ள வேண்டும். அதிலும் மாலை 3.30 முதல் 4.30 வரை புதன் மற்றும் சந்திர ஹோரை உள்ளதால் அதுவே சரடு கட்டிக்கொள்ள உகந்த நேரமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.