சோழநாட்டு காவிரியின் இருமருங்கிலும் சைவ, வைணவ பேதமின்றி ஒன்றோடொன்று புராணத் தொடர்பு பெற்ற சிறப்புமிகு தலங்கள் அதிகம். அவற்றுள் ஒன்றுதான் "திருத்துருத்தி' எனப்படும் குத்தாலம். சிறப்புமிக்க ஐந்து பெரு சிவாலயங்களுடன் திருமால் விண்ணகரம் ஒன்றும் இணைந்த சிறப்புடைய ஊர் இது.
காவிரி நதியின் இரு கிளைகளுக்கு இடையில் தாமாகவே உருவான மணல்திட்டுகளைத் தமிழில் "துருத்தி' என்று குறிப்பிடுவர். தேவாரப் பாடல்களில் "திருத்துருத்தி' என்று குறிப்பிடப்பட்டுள்ள இத்தலம், புராண காலத்தில் உத்தால மரங்கள் நிறைந்து காணப்பெற்றமையால் "உத்தாலம்' என்று வழங்கப்பட்டது. இதுவே பின்னாளில் "குத்தாலம்' என்று திரிந்தது.
சிவ சாப நிவர்த்திக்காக பசுவுரு கொண்டு திரிந்த கோரூபாம்பிகை, வரிசையாக சிவ பூஜை செய்திட்ட காவிரிக்
கரைத் தலங்கள் இப்பகுதியில் பல. இவற்றுள் தேரழுந்தூர், அசிக்காடு, மாந்தை, கோமல், ஆனாங்கூர், திருக்கோழம்பம், கரைகண்டம், திருவாவடுதுறை எனப் புராணத்தொடர்புடைய பதினான்கு தலங்கள் முக்கியமானவை. இத்தலங்கள்தோறும் கோசஹ பெருமாளாகப் பசுமேய்ப்பர் வடிவந்தாங்கி, அம்பிகைக்குக் காவலாக திருமால் காத்து நின்றிருக்கின்றார் என்கிறது புராண வரலாறு.
இப்புராணக் கதையுடன் தொடர்புடைய திருவேள்விக்குடி, எதிர்கொள்பாடி, திருமங்கலம், திருமணஞ்சேரி முதலான திருமணத்தலங்களில் முதன்மையானது குத்தாலம்.
திருவாவடுதுறையில் பசுவுரு நீங்கப்பெற்ற அம்பிகையானவள், பரதமுனி செய்திட்ட வேள்வியின் பயனாக, அவருக்குப் பெண்மகவாக அவதரித்த தலம்தான் இந்த குத்தாலம். தக்க சமயத்தில் திருக்குறிப்பால் இவற்றை உணர்த்திய சிவன் "சொன்னவாறு அறிவார்' என்கிற திருநாமத்துடன் அம்பிகையைத் திருமணம் புரிந்து ஆட்கொண்டு அருளியதும் இத்தலத்தில்தான்.
அம்மையப்பரின் இந்தப் புனிதமான திருமண வைபவத்தை மூவுலகத்தினரும் அதிசயிக்கும்படி நிகழ்த்திக் காட்டிட திருவுளம் கொண்ட திருமாலும் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளாக இத்தலத்திலேயே அவதானித்ததுதான் சிறப்பு. இவர் திருமண பாக்கியம் அருளிடும் வரப்பிரசாதி.
சிறப்புடைய அம்மையப்பர் திருமணத்தை நடத்திக்காட்டிய மகிழ்வுடன், தாமும் செங்கமலத்தாயாருடன் மங்களவிவாஹம் ஏற்று மகிழ்ந்தாராம் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள். உலகத்து மாந்தரின் திருமண வைபவத்துக்கான சம்பிரதாயங்கள் இன்னின்னவை என உலகத்தவருக்கு உணர்த்திடும்படியாக முதன்முதலில் 42 வகையான புனிதச்சடங்குகளுடன் தெய்வத் திருமணம் நிகழ்த்தப்பெற்ற பெரும்புண்ணியத்தலமும் இது.
அமைதியான சூழலில் அதீதபொலிவுடன் இரண்டு திருச்சுற்றுகளுடன் திகழ்கிறது இவ்வாலயம். பூதேவி, நீளாதேவி சமேதரராக மூலஸ்தானத்தில் மிகக் கம்பீரத்துடன் பெரிய திருவினராய் நின்ற கோலத்தில் எழுந்தருளியிருக்கின்றார்
ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள். அவருக்கு முன்னே உள்ள தொன்மையான உற்சவத் திருமேனிகளும் வெகு அழகானவை. அர்த்தமண்டபத்தில் ஆழ்வாராதிகள் இடம் பெற்றுள்ளனர். சுவரின் இருமருங்கிலும் தசாவதார ஓவியங்கள் இடம் பெற்று இருப்பது கூடுதல் அழகு. மூலவருக்கு வலது பாகத்தில் தனித்த சந்நிதியில் பூரண செüந்தர்யத்துடன் தாயார் எழுந்தருளி இருக்கின்றாள். அம்பிகையுடன் தானும் பசுரூபம் தாங்கி உடன் வந்த திருமகள் தாமரைமலர்க்
குமரியாக இங்கே தோன்றிருளியதாக ஐதீகம். இதனாலேயே இத்தாயாருக்கு பங்கஜவல்லி, செங்
கமலநாச்சியார் என்பதெல்லாம் திருநாமம்.
சதா அலங்காரரூபராக வெள்ளிக்கவசத்துடன் காட்சி தருகிறார் பால அனுமார். "வேண்டியது அருளும் வரப்பிரசாதி இந்த ஆஞ்சனேயர்' என்று சொல்கிறார்கள். தொடர்ந்த வேதமந்திரஜபங்களின் வலுவால் செறிந்து, சாநித்யத்துடன் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதி நிறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சிவனுக்கு மிக உயர்ந்ததாகிய மகாவில்வம் இவ்வாலயத்துக்கு உரிய புனித விருட்சமாக வழிபடப்படுவது சிறப்பு .
சுஜாதா மாலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.