சூரியனை மையமாகக் கொண்ட பஞ்ச பாஸ்கரத் தலங்களுள், சென்னைக்கு அருகில், திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஞாயிறும் ஒன்று. சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான தலமாகக் கருதப்படுகிறது.
சோழர்காலத்தில் தொண்டை நாடு 24 கோட்டங்களாகப் பிரித்து ஆளப்பட்டது. அதில் புழல் கோட்டத்தில் ஞாயிறு தலைசிறந்த நாடாக இருந்தது என்று சோழர்கால கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
இறைவன் புஷ்பரதேஸ்வரர் என்றும், இறைவி சொர்ணாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பிகை சுவாமியின் வலதுபுறத்தில் சந்நிதி கொண்டிருப்பதால், இது திருமண பாக்யம் அருளும் தலம் என்றும் கூறுகிறார்கள்.
ஒரு சமயம், பிரம்ம தேவனின் சாபத்தால் நோயுற்ற சூரிய பகவான், தன் நோய் நீங்க நீராடி சிவ பூஜை செய்ய வேண்டி இத்தலம் வந்தார்.
அங்குள்ள தாமரைக் குளம் அவரைப் பெரிதும் கவர்ந்தது. காரணம், குளத்தில் ஓராயிரம் இதழ் கொண்ட அழகிய தாமரைகள் பூத்திருந்தன. அதில் இறங்கி நீராடி மானசீகமாக வழிபட்ட போது தாமரை மலர் ஒன்றில் லிங்க ரூபமாக சிவபெருமான் எழுந்தருளினார். அவரை எடுத்து ஆசனத்தில் இருத்தி, வணங்கி சாபத்தால் உண்டான நோய் நீங்கப் பெற்றார் பகலவன்.
இறைவன் புஷ்பத்தின் இடையே தோன்றியதால் புஷ்பரதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை வணங்கி நோய் நீங்கப்பெற்ற சூரிய பகவான் இங்கு சிறப்பு தெய்வமாக வழிபடப்படுகிறார்.
பார்வைக் குறைபாடுடைய சோழ மன்னன் ஒருவனுக்கு இத்தலத்தில் தாமரையின் மேல் இறைவன் பேரொளியுடன் ஞாயிறாகத் தோன்றி, காட்சிதந்து, அவனுக்கு முழுப்பார்வையையும் தந்ததாகவும், அதனால் இத்தலம் "ஞாயிறு' என அழைக்கப்படுவதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது.
மன்னன் இப்பகுதிக்கு வந்தபோது அருகில் உள்ள ஓரிடத்தில் தங்கினானாம். அந்த இடமே "சோழவரம்' என அழைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
சங்கிலி நாச்சியாரோடு தொடர்புடைய தலம், ஞாயிறு. திருவொற்றியூரில் சிவனுக்கு மாலை தொடுத்துத் தந்த சங்கிலி நாச்சியாரை அங்கு வந்த சுந்தரர் கண்டு காதல் கொண்டு சிவனையே உதவிக்கு அழைக்கிறார். சிவனும் உதவிட, அவர்கள் திருமணம் நடந்தது.
அந்தத் தெய்வப்பெண் அவதரித்தது இந்தத் தலத்தில் தான். பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் ஞாயிறு நாட்டின் பெருமைகளையும் சங்கிலியாரின் சிறப்புகளையும் கூறியுள்ளார். சங்கிலி நாச்சியாருக்கும் இங்கு தனி சந்நிதி உள்ளது.
மாசிமக திருநாளில்தான் சங்கிலிநாச்சியாருக்கும் சுந்தரருக்கும் திருமணம் நடைபெற்றதாம். அதனால் இங்கு அன்று விளக்கு பூஜை விசேஷமாக நடைபெறுகிறது.
கண்வ மகரிஷி இவ்வூர் அருகே ஆசிரமம் அமைத்து சிவபெருமானையும் சூரிய பகவானையும் வழிபட்டு முக்தி அடைந்ததாக புராண வரலாறு கூறுகிறது. அவருக்கும் இங்கு தனி சந்நிதி உள்ளது.
தலவிருட்சம் நாகலிங்க மரம். சூரியன் வழிபட்ட தடாகம் சூரிய தீர்த்தம் எனப்படுகிறது.
அகத்தியரால் அருளப்பட்ட ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை இத்தலத்தில் பாராயணம் செய்தால், அது ஆயிரம் மடங்கு பலன் தரும் என்று கூறுகிறார்கள்.
மூலவர் புஷ்பரதேஸ்வரருக்கு எதிரே சூரிய பகவான் தரிசனமளிக்கிறார். சுவாமி, அம்பாள் சந்நிதிகளுக்கு முன்புள்ள முகமண்டபத்தை கலையம்சமுள்ள தூண்கள் தாங்குகின்றன. அதில் சூரியன், கோணர், கோணங்கி, மோகினி, ரிஷிகள், சிற்றரசர்கள், யாளி சிவ பூஜை செய்யும் ரிஷிகள், காமாட்சி சிவபெருமானை வழிபடும் காட்சி, கிருஷ்ண காளிங்க நர்த்தனம் போன்ற உருவங்கள் காணப்படுகின்றன.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை ஆகியோரை தரிசிக்கலாம்.
பிரகாரத்தில் உற்சவர் கமல விநாயகர், சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், சங்கிலி நாச்சியார் ஆகியோருக்கு தனி சந்நிதிகள் உள்ளன.
சூரியதோஷம் உள்ளவர்களும், சூரிய தசை, சூரிய புத்தி நடக்கிறவர்களும், பார்வைக் குறைபாடு, பிணிகள், களத்திர தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து புஷ்பரதேஸ்வரரையும் சூரிய பகவானையும் வழிபட்டால் நற்பேறு அடையலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து வழிபாடு செய்வது கூடுதல் சிறப்பு.
சித்திரை, தை மாதப்பிறப்பு, ரதசப்தமி முதலான நாளில் இங்கு சூரியபகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
சித்திரை வருடப் பிறப்பின் போது முதல் ஏழு நாள்கள் சுவாமி, அம்பாள் மீது சூரிய கதிர்கள் விழுகிறது. இந்த ஏழு நாள்களுக்கும் சிவனுக்கான பூஜையை சூரியனை வந்து செய்வதாக ஐதீகம்.
சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் ஞாயிறு அமைந்துள்ளது.
- மு.வெங்கடேசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.