இந்தோனேசியா நிலநடுக்கத்தில் 100 பேர் பலி: 45 ஆயிரம் பேர் வீடுகள் இன்றி தவிப்பு
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த புதன்கிழமை (டிச.7) நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 100 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த புதன்கிழமை (டிச.7) நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 100 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள அசே மாகாணத்தில் உள்ள பெடி ஜெயா மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை காலை நேரிட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்நிலநடுக்கத்தால், அப்பகுதியில் உள்ள 11 ஆயிரம் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது. இதில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகி விட்டன. இதில் பெரும்பாலனவை வீடுகள், கடைகள், மசூதிகள், பள்ளிக் கட்டடங்கள் ஆகும்.
வீடுகளை இழந்தவர்கள் தற்காலிக முகாம்கள் மற்றும் மசூதிகளில் அல்லது உறவினர்கள் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில், நூற்றுக்கணக்கானோர் தங்குவதற்கு இடமும், குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து, அவர்களுக்கு உதவும் வகையில், தாற்காலிக நிவாரண முகாம்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில், இந்தோனேசிய ராணுவ வீரர்கள் 1,000 பேரும், அந்நாட்டு போலீஸார் 900 பேரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் விடோடோ, நேற்று வெள்ளிக்கிழமை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மீட்புப் பணிகளையும், நிவாரண முகாம்களையும் பார்வையிட்டார்.
இன்று சனிக்கிழமை, மோப்ப நாய்கள் மூலம் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை கண்டெடுக்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தோனேசிய ரெட் கிராஸ் அமைப்புக்கு உதவுவதற்காக ஆஸ்திரேலிய டாலர் 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் ($ 750,000) வழங்குவதாக ஆஸ்திரேலியா அரசு கூறியுள்ளது.
மேலும், இந்தோனேசிய அரசுக்கு தேவையான கூடுதல் உதவிகளை அளிக்கவும் ஆஸ்திரேலி அரசு தயாராக உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் கூறியுள்ளார்.
இந்தோனேசியா அருகே நடுக்கடலில் கடந்த 2004-ஆம் ஆண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதையடுத்து, கடலில் எழுந்த சுனாமி அலைகள், இந்தோனேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலில் இருக்கும் நாடுகளின் கடலோரப் பகுதிகளை தாக்கின. இதில் இந்தோனேசியாவில் மட்டும் 1,70,000 பேர் பலியாகினர் என்பது நினைவுகூரத்தக்கது.