பனாமா ஆவணங்கள் விவகாரம்: நவாஸ் ஷெரீப்பை விசாரிக்க பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு!
பனாமா ஆவணங்கள் ஊழல் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விசாரிக்குமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இஸ்லாமாபாத்: பனாமா ஆவணங்கள் ஊழல் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விசாரிக்குமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உலக அளவில் வரி ஏய்பாளர்களின் சொர்க்கம் என கருதப்படும் பனாமா நாட்டில் பல்வேறு போலி நிறுவனங்கள் தொடங்கி, பிரபலங்கள் பலர் கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்துள்ளனர். இது பற்றிய நிறைய ஆவணங்கள் 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் சமீபத்தில் வெளியாயின.
உலக அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்த இந்த பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பெயரும் இடம் பெற்றிருந்தது இவ்விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் எதிர்க்கட்சியான தெஹ்ரிக் -இ -இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் உட்பட பலர் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
Advertisement
இந்த மனுக்களை இன்று விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது உறவினர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஒருவர் தலைமையில் தனியாக விசாரணை கமிஷன் மூலம் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
விசாரணைக் கமிஷன் அமைப்பது தொடர்பான விபரங்களை அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த கட்ட விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.