2-ஆம் உலகப் போரின் போது நடந்த பல்வேறு தாக்குதல்களின் இடையே இந்தக் கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட தினம் அது. ஆம், ஆகஸ்ட் 6, 1945 உலகின் முதல் அணுகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜப்பானைச் சேர்ந்த ஹிரோஷிமா என்ற நகரின் மீது 'லிட்டில் பாய்' என்ற அணுகுண்டை அமெரிக்கா வீசியது.
இந்த உலகப் போரில் பல்வேறு நாடுகள் இரு பிரிவுகளாக பிரிந்து போரிட்டு வந்தது. அச்சமயத்தில் யாரும் எதிர்பாராத விதமாக அமெரிக்காவின் பேர்ல் ஹார்பரின் மீது ஜப்பான் திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் அந்த இடமே நாசமானது. பல அப்பாவி உயிர்கள் பலியாகின.
இந்நிலையில், அந்த திடீர் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்கா ஒரு திட்டம் தீட்டியது. அதன்படி ஜப்பான் நகரின் மீதும் அதேபோன்று திடீரென தாக்குதல் நடத்த திட்டமிட்டது. அதன்படி ஜப்பானின் முக்கிய நகர்புறங்களில் ஒன்றான ஹிரோஷிமா மீது அந்த முதல் அணுகுண்டுத் தாக்குதலை நடத்தியது.
அதேபோன்று, இரண்டு தின இடைவேளையில் அதாவது சரியாக ஆகஸ்ட் 9, 1945 அன்று மற்றொரு நகரான நாகசாகியில் 'ஃபேட் பாய்' என்ற மற்றொரு அணுகுண்டை வீசித் தாக்கியது. இந்த கொடூர தாக்குதல் சம்பவங்களால் அந்த 2 நகரங்களுமே சுடுகாடாயின.
பல அப்பாவி மக்களின் உயிர் பறிபோனது. மேலும், இந்த அணுகுண்டின் கதிர்வீச்சு காரணமாக அவ்விடங்களில் பேரழிவு நிகழ்ந்தது. பல காலங்களாக மக்களால் வாழ முடியாத இடமாகவே அது மாறியது. இன்றளவும் அந்நகரங்களில் அணுகுண்டு கதிர்வீச்சால் ஏற்பட்ட தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.
இந்த பேரழிவுத் தாக்குதலின் காரணமாக ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் துடிக்கத் துடிக்க பலியாகினர்.
முதன்முதலாக 1945-ம் ஆண்டின் துவக்கத்தில் நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் சுமார் 600 கோடி ரூபாயில் தயார் செய்யப்பட்ட இந்த அணுகுண்டுச் சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியது. மொத்த உலகில் பகிரங்கமாக நடத்தப்பட்ட முதல் அணுகுண்டுச் சோதனையும் இதுதான்.
இந்தச் சோதனையின்போது அங்கிருந்த விஞ்ஞானிகளில் ஒருவர் கூறியதாவது:
இவ்வளவு பெரிய ஆற்றல்மிக்க விளைவை மனிதன் இதுவரை ஏற்படுத்தியதில்லை. அந்த அதிகாலைச் சமயத்தில் அணுகுண்டு பரிசோதிக்கப்பட்டது. அப்போது கண்களைக் குருடாக்கும் அளவுக்கு பேரோளி ஏற்பட்டது. மேலும், அந்த வெப்பம் அங்கிருந்தவர்களை மிகவும் பாதித்தது.
இதிலிருந்து மீண்ட அடுத்த 30 நொடிகளில் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து நாங்கள் மீளவே இல்லை. அது அவ்வளவு பயங்கரமாக இருந்தது. அங்கிருந்த எங்கள் அனைவருக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டது. இத்தனைக்கும் நாங்கள் சோதனை நடந்த இடத்தில் இருந்து 9 கிலோ மீட்டர்கள் தொலைவில் இருந்து கவனித்தோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.