இரட்டை கோபுரத் தாக்குதலில் பலியானவர் உடல் 16 ஆண்டுகளுக்குப் பிறகு அடையாளம் தெரிந்தது
நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிரிழந்தவரின் உடல் ஏறக்குறைய 16 ஆண்டுகளுக்குப் பிறகு அடையாளம் காணப்பட்டது.
நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிரிழந்தவரின் உடல் ஏறக்குறைய 16 ஆண்டுகளுக்குப் பிறகு அடையாளம் காணப்பட்டது.
நியூயார்க்கில் இருந்த உலகப் புகழ் பெற்ற இரட்டை கோபுரங்கள் மீது அல்-காய்தா பயங்கரவாதிகள் இரு விமானங்களை மோதி தாக்குதல் நிகழ்த்தினர். கடந்த 2001-ஆம் ஆண்டு செப். 11-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட அந்த தாக்குதலில் 2,750-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அப்போது உயிரிழந்த ஓர் ஆணின் அடையாளம் திங்கள்கிழமை தெரிய வந்தது. எனினும் பலியானவரின் குடும்பத்தினர் வேண்டுகோளின்படி அவர் யார் என்பது பொதுமக்களுக்கு வெளியிடப் போவதில்லை என்று நியூயார்க் நகர அரசு தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
பயங்கரவாதத் தாக்குதலில் அந்தக் கட்டடங்களில் இருந்த 2,606 பேர் உயிரிழந்தனர். இரு விமானங்களில் இருந்த பயணிகள், மீட்புப் படையைச் சேர்ந்தவர்கள் என அந்தத் தாக்குதலில் 2,750-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இருந்த போதிலும், பலியானவர்களில் இதுவரை 1,641 பேர்களின் அடையாளம் மட்டுமே உறுதியாகத் தெரிய வந்துள்ளது. பொதுவாக, இறந்தவரின் எலும்புகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், மரபணு சோதனை முறையில் அடையாளம் காணும் பணி இன்னும் நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழந்த நபர்களை அடையாளம் காண்பதில் மிகுந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.
1368, 1362 அடி உயரத்தில் 110 மாடிகள் கொண்ட அந்தக் கட்டடங்கள் மீது இரு விமானங்கள் மோதிய 2 மணி நேரத்தில் அவை முற்றிலும் தகர்ந்து விழுந்தன. அந்தக் கட்டடங்களைச் சுற்றியிருந்த பல கட்டடங்கள் முற்றிலுமாகவோ, சிறிய அளவிலோ சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளை அகற்ற 8 மாதங்கள் ஆயிற்று.