வங்கதேசத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற சிமென்ட் லாரி பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
வடமேற்கு வங்கதேசத்தில் உள்ள ரங்கபூர் நகரில் சனிக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது. தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் ரமலான் பண்டிகைக்காக சிமென்ட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியில் வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைச் சரிவில் பள்ளத்துக்குள் கவிழ்ந்தது.சிமென்ட் மூட்டைகள் பயணிகள் மீது விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். பலியானவர்களில் 10 வயது சிறுமி உள்ளிட்ட நான்கு பேர் பெண்கள் என்றனர்.