"அதிபரைப் படுகொலை செய்ய சதித் திட்டம்; வட கொரியாவுக்கு எதிரான போர் அறிவிப்பு'
வட கொரிய அதிபரைப் படுகொலை செய்ய அமெரிக்காவும் தென் கொரியாவும் சேர்ந்து தீட்டிய சதித் திட்டமானது போர் அறிவிப்புக்கு சமமானது என்றும் இது தொடர்பாக ஐ.நா.வில் புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் ஐ.நா.வுக்கான
வட கொரிய அதிபரைப் படுகொலை செய்ய அமெரிக்காவும் தென் கொரியாவும் சேர்ந்து தீட்டிய சதித் திட்டமானது போர் அறிவிப்புக்கு சமமானது என்றும் இது தொடர்பாக ஐ.நா.வில் புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் ஐ.நா.வுக்கான வட கொரிய தூதரகம் தெரிவித்தது.
நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் அந்தத் தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னைப் படுகொலை செய்ய அமெரிக்காவும் தென் கொரியாவும் கூட்டு சதி செய்தது சமீபத்தில் அம்பலமானது. அதைத் தொடர்ந்து, சதியில் ஈடுபட்ட பயங்கரவாதி பிடிபட்டார். அந்த சதித் திட்டத்தின் பகுதியாக வட கொரியாவில் மறைந்துள்ள பயங்கரவாதிகள் ஒவ்வொருவரையும் வேட்டையாடிப் பிடிப்பது உறுதி.
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. மற்றும் தென் கொரிய உளவு அமைப்பு இணைந்து தீட்டிய சதியை முறியடிப்போம். வட கொரிய நாட்டுக்கு எதிராக நடக்கும் சதியை முறியடிக்கும் எங்களது முயற்சியில் ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
அதிபரைப் படுகொலை செய்யத் திட்டம் தீட்டியதையும், அதற்காக பயங்கரவாதிகளை ஏவி விட்டிருப்பதையும் வட கொரியாவுக்கு எதிரான போர் அறிவிப்பாக கருதுகிறோம். இது தொடர்பாக ஐ.நா.வில் புகார் தெரிவித்துள்ளோம் என்று ஐ.நா.வுக்கான வட கொரிய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னைப் படுகொலை செய்ய அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தீட்டிய சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதாக வட கொரிய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்தது.
வட கொரிய தலைநகர் பியோங்யாங்கில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் அதிபர் கலந்து கொள்ளும்போது அவருக்கு எதிராக உயிரியல் ஆயுதம் அல்லது ரசாயன ஆயுதம் மூலம் தாக்குதல் நிகழ்த்த சதித் திட்டம் தீட்டப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதற்காக மூளைச் சலவை செய்து அனுப்பப்பட்ட நபரை விசுவாசம் மிக்க வட கொரிய பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்து, அந்த சதியைக் கண்டுபிடித்து முறியடித்தனர் என்றும், வட கொரியாவில் ஊடுருவி மறைந்திருக்கும் அமெரிக்க உளவாளிகள், பயங்கரவாதிகளைத் தேடி இரக்கமின்றி அழிப்போம் என்றும் தெரிவித்திருந்தது.
அமெரிக்காவின் சிஐஏவும், தென் கொரியாவின் உளவு அமைப்பும் இணைந்து தீட்டிய அந்த சதித் திட்டத்தை வட கொரியாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர் என்றே கருதுவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறியது.
படுகொலைக்கான சதித் திட்டம் எப்போது, எவ்வாறு அம்பலமானது, வட கொரிய பாதுகாப்புப் படையினரிடம் சிக்கிய அமெரிக்க உளவாளியின் கதி என்ன என்பது குறித்து கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.