முகப்பு
உலகம்

ரஷியாவிடம் ரகசிய உளவுத் தகவல் கசிவு: டிரம்புக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு

அமெரிக்காவுக்குக் கிடைத்த ரகசிய உளவுத் தகவலை ரஷியாவுடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்து கொண்டதற்கு, அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:32 PM
அமெரிக்க அதிபர் மாளிகையில் டொனால்ட் டிரம்ப், ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் ஆகியோரிடையே கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பு (கோப்புப் படம்).
பகிர்:

அமெரிக்காவுக்குக் கிடைத்த ரகசிய உளவுத் தகவலை ரஷியாவுடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்து கொண்டதற்கு, அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கடந்த வாரம் அமெரிக்கா வந்து, வெள்ளை மாநிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார்.
அப்போது, ஐரோப்பிய நாடுகளில் மடிக் கணினியை வெடிகுண்டாகப் பயன்படுத்தி, விமானங்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்தும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் சதித் திட்டம் குறித்து தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலை லாவ்ரோவிடம் அதிபர் டிரம்ப் தெரிவித்ததாக 'வாஷிங்டன் போஸ்ட்' தெரிவித்தது.
இஸ்ரேல் உளவு நிறுவனம், சங்கேத மொழியில் அந்த உளவுத் தகவலை அளித்ததாகவும், பரஸ்பர ஒப்பந்தத்தின்கீழ் அதுபோன்ற தகவல்களை அமெரிக்கா தவிர வேறு எந்த நாட்டுக்கும் தெரிவிக்கக் கூடாது என்பதே அதன் அர்த்தம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மிகவும் ரகசியமான அந்தத் தகவலை பாதுகாப்புக் கூட்டணியில் இல்லாத ரஷியாவிடம் அளித்தது, உளவு விவகாரத்தில் அமெரிக்காவை பலவீனப்படுத்துவதாக ஊடகங்களும், நிபுணர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடையே தங்கி, ரகசியத் தகவல்களை சேகரித்து அளித்து வரும் உளவாளிக்கு, டொனால்ட் டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சிலர் குற்றம் சாட்டினர்.
எனினும், ரஷியாவுடன் பகிர்ந்து கொண்ட உளவுத் தகவல்களால் அமெரிக்கப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஹெச்.ஆர். மெக்மாஸ்டர் தெரிவித்தார்.
தாங்கள் அளித்த உளவுத் தகவலை ரஷியாவுக்கு அளித்தது இஸ்ரேலுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டாலும், அமெரிக்காவுடனான உளவுத் துறை ஒத்துழைப்பு தொடரும் என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் ரோன் டெர்மெர் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் உளவுத் தகவல் பரிமாற்றங்களை தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாக, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் தெரிவித்தன.
எனக்கு உரிமை உண்டு...
பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிட, ரஷியாவுடன் உளவுத் தகவலைப் பகிர்ந்து கொள்வதற்குத் தனக்கு உரிமை உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
ஒரு அதிபர் என்ற முறையில், அதுவும் அனைவருக்கும் தெரிந்து நடைபெற்ற ஒரு வெள்ளை மாளிகைச் சந்திப்பில், பயங்கரவாதத்துக்கு எதிராகவும், விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புக்காகவும் சில தகவல்களை பகிர்ந்துகொள்ள எனக்கு பூரண உரிமை உள்ளது.
ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக ரஷியா தனது நடவடிக்கைளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே நான் அந்தத் தகவலை அளித்தேன் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

வட கொரியாவின் போர் மிரட்டல்களையும், அணு ஆயுத அச்சுறுத்தலையும் இனியும் சகித்துக்கொள்ள முடியாது. அந்த நாட்டுடன் போர் மூள்வதற்கு மிக அதிக வாய்ப்புகள் உள்ளன.
- மூன் ஜே-இன்
தென் கொரிய அதிபர்

ரஷிய சமூக வலைதளங்களுக்கு உக்ரைனில் தடை விதிக்கப்பட்டதற்கு ரஷியா பழி வாங்கிவிட்டது. உக்ரைன் பிரதமரின் வலைதளம், ரஷிய பொறியாளர்களால் ஊடுருவப்பட்டுள்ளது.
-மிடித்ரோ ஷிம்கிவ்
உக்ரைன் பிரதமர் அலுவலக
துணை நிர்வாகி

முழு கட்டுரையைப் படிக்க →