இங்கிலாந்தில் பாப் இசை நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு: 19 பேர் பலி; 50 பேர் காயம்
இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் பாப் இசை நிகழ்ச்சிக்காக திரண்டிருந்த கூட்டத்தில் குண்டு வெடித்ததில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மான்செஸ்டர்: இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் பாப் இசை நிகழ்ச்சிக்காக திரண்டிருந்த கூட்டத்தில் குண்டு வெடித்ததில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம்டைந்தவர்கள் அனைவரும் மான்செஸ்டர் பகுதியில் உள்ள 6 மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மான்செஸ்டர் நகரில் உள்ள வடக்கு இங்கிலிஷ் சிட்டி என்ற இடத்தில் திங்கள்கிழமை இரவு (மே 22) அமெரிக்க பிரபல பாடகியும், நடிகையுமான அரியானா கிராண்டியின் (Ariana Grande) இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
இதில் ஏராளமான ரசிகர்கள் உற்சாகம் பொங்க இசை நிகழ்ச்சியை கொண்டாட்டத்துடன் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணியளவில் திடீரென அப்பகுதியில் பயங்கர சத்தத்துடன் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. பெரும் கூச்சலோடு, கூட்டத்தினர் அங்குமிங்கும் ஓடியதால் அங்கு குழப்பம் நிலவியது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக மான்செஸ்டர் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் காயமடைந்தவர்கள் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தீவிரவாத தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பு நேரிட்ட இடத்திலிருந்தவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ள போலீஸார், அந்தப் பகுதி முழுவதையும் தங்களின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வந்துள்ளனர்.