ஜிம்பாப்வேயில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம்: அதிபர் முகாபே நலமுடன் இருப்பதாக தகவல்!
ஜிம்பாப்வேயில் ரத்தம் சிந்தா புரட்சியின் மூலம் ஆட்சியினைக் கைப்பற்றியுள்ள ராணுவம், அந்நாட்டு அதிபர் முகாபே நலமுடன் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.
ஹராரே: ஜிம்பாப்வேயில் ரத்தம் சிந்தா புரட்சியின் மூலம் ஆட்சியினைக் கைப்பற்றியுள்ள ராணுவம், அந்நாட்டு அதிபர் முகாபே நலமுடன் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே கடந்த 1980 ஆம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெற்று சுதந்திர நாடானது.அன்று முதல் அந்நாட்டு அதிபராக பதவி வகித்து வரும் ராபர்ட் முகாபே (93), அந்நாட்டின் சக்தி வாய்ந்த தலைவராக காணப்படுகிறார்.
அவரது ஆட்சி மீதும் கட்சியில் உறவினர்களின் தலையீடு குறித்தும் தொடர்ச்சியாகப் புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அதிபருக்கு எதிராக நடந்ததாக குற்றம் சாட்டி துணை அதிபர் எம்மர்சன் பதவி நீக்கப்பட்டார். இதன் காரணமாக அங்கு அதிருப்தி நிலவியது.
இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் மற்றும் முக்கிய சந்திப்புகளில் திடீரென, ராணுவம் குவிக்கபட்டது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை தலைநகர் ஹராரேவை ராணுவ பீரங்கிகள் சுற்றி வளைத்தன. அதிகளவிலான ராணுவ வீரர்கள் தலைநகரைச் சுற்றி குவிக்கப்பட்டனர்.
அத்துடன் அந்நாட்டு அரசு ஊடக நிறுவன தலைமையகத்தையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதில் ஒளிபரப்பாகி வந்த அதிபரின் உரையை நிறுத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நாட்டின் முப்படை தளபதி மோயா தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
இது அரசை ராணுவம் கைப்பற்றும் முயற்சி இல்லை. மாறாக அதிபர் ராபர்ட் முகாபேவை சுற்றியுள்ள ஊழல்வாதிகளையும் குற்றவாளிகளை குறிவைத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். அவர் நலமாக இருக்கிறார்.
இவ்வாறு மோயா தெரிவித்தார்.
இந்த சம்பவமானது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு நிலவும் அரசியல் நிலையற்ற தன்மையின் காரணமாக தங்கள் நாட்டினர் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று அயல்நாட்டு தூதரகங்கள் தெரிவித்துள்ளன.