முகப்பு
உலகம்

பேஸ்புக்கில் ஒவ்வொரு 'லைக்'குக்கும் ஒவ்வொரு குத்து: மனைவியின் முகம் சிதையுமளவுக்கு கணவன் கொடூர சித்ரவதை! 

பேஸ்புக்கில் மனைவியின்  புகைப்படத்திற்கு கிடைக்கும் ஒவ்வொரு 'லைக்'குக்கும், அவரை முகத்தில் குத்து விட்டு தாக்கி சித்ரவதை செய்து வந்த கொடூர கணவன் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

Updated On : 29 நவம்பர், 2017 at 5:57 PM
பகிர்:

நெம்பி (உருகுவே): பேஸ்புக்கில் மனைவியின்  புகைப்படத்திற்கு கிடைக்கும் ஒவ்வொரு 'லைக்'குக்கும், அவரை முகத்தில் குத்து விட்டு தாக்கி சித்ரவதை செய்து வந்த கொடூர கணவன் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

உருகுவே நாட்டின் சன்ஸின் மாகாணத்தில் உள்ள நெம்பி என்ற பகுதியைச் சேர்ந்தவர் அடோல்பினா (21). இவரது கணவர் கேலியானோ (32). மனைவியின் மீது சந்தேகப்பட்டு கேலியானோ எப்போதும் அவரைத் தாக்குவார் என்று கூறப்படுகின்றது. அத்துடன் மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவரை தொடர்ச்சியாக சித்ரவதைகளும் செய்து வந்துள்ளார். மேலும் அடோல்பினா விருப்பதுக்கு மாறாக அவரை வீட்டில் அடைத்து வைத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.         

சித்ரவதையின் உச்ச கட்டமாக பேஸ்புக்கில் அடோல்பினாவின்  புகைப்படத்திற்கு கிடைக்கும் ஒவ்வொரு 'லைக்'குக்கும், அவரை முகத்தில் குத்து விட்டுத் தாக்கி வந்துள்ளார். அத்துடன் அவரது படத்திற்கு ஏதேனும் கமெண்ட்டுகள் வந்தாலும் சரி, ரியாக்ஷன் சிம்பல்கள் இடப்பட்டாலும் சரி, அதற்கான நோட்டிபிகேஷன்கள் வந்தவுடன் அடோல்பினாவைத் தாக்கத் துவங்கி விடுவார்.      

Advertisement

இந்த கொடூரம் இன்னும் தீவிரமாகி அடோல்பினாவின் பேஸ்புக் பக்கத்தினை முழுவதுமாக கேலியானோ பொறுப்பில் எடுத்துக் கொண்டு, தானே புகைப்படங்களை அப்லோடு செய்து விட்டு, ஒவ்வொரு 'லைக்'கும் வர வர மிருகத்தனமாக தாக்கத் துவங்கியுள்ளார். ஆனால் அடோல்பினாவின் நண்பர்கள் யாருக்கும் இந்த விஷயங்கள் எதுவும் தெரியாது.

இறுதியாக நேற்று முன்தினம் நடந்த தாக்குதல்களின் காரணமாக அடோல்பினா இறந்து விடுவார் என்று பயந்த கேலியானோவின் தந்தை, மகனுக்குத் தெரியாமல் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த போலீஸார் தற்பொழுது கேலியானோவைக் கைது செய்துசிறையில் அடைத்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அடோல்பினாவின் வழக்கறிஞர் மார்ட்டின்ஸீ கூறியதாவது:

அடோல்பினாவின் வாய் முற்றிலுமாக உடைந்துள்ளது. அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தொடர் அடிகளின் காரணமாக தோல் வழன்று காணப்படுகிறது. அடோல்பினாவின் பேஸ்புக் பக்கத்தினை கேலியானோ முழுமையாக கட்டுப்படுத்தி வந்துள்ளார். அவரது புகைப்படத்திற்கு 'லைக்' மற்றும் 'கமெண்ட்' இடுபவர்களுக்கும், அடோல்பினாவுக்கும் தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டி வந்திருக்கிறார்.

தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அடோல்பினாவுக்கு விரைவில் முக ஒழுங்கமைப்பு சிகிச்சை செய்யபட உள்ளது. தன்னுடைய முகத்தினை அவராலேயே நம்ப முடியாத அளவுக்கு முகம் மாறியுள்ளது. 

சிறையில் உள்ள கேலியானோவுக்கு அந்நாட்டுச் சட்டப்படி 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.