அமெரிக்காவில் "ஹார்வி' புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மற்றொரு மாணவி ஷாலினி சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அமெரிக்காவை இரு வாரங்களுக்கு முன்னர் தாக்கிய "ஹார்வி' புயல் காரணமாக, அந்த நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்தது.
இதன் காரணமாக, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாகாணத்தின் ஹூஸ்டன் நகரம் மிகப் பெரிய அளவில் பாதிப்படைந்தது.
இந்த நிலையில், டெக்ஸாஸ் ஏஎம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நிகில் பாட்டியா என்ற இந்திய மாணவரும், அதே பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஷாலினி சிங் என்ற இந்திய மாணவியும் பிரயான் ஏரியில் கடந்த வாரம் குளிக்கச் சென்றனர்.
அப்போது அந்த ஏரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருவரும் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்புக் குழுவினர் மருத்துமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி நிகில் பாட்டியா (25) உயிரிழந்தார். மாணவி ஷாலினி சிங்கின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஷாலினி உயிரிழந்ததாக மருத்துவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்தனர்.
தில்லியைச் சேர்ந்த ஷாலினி சிங், இந்தியாவில் பல் மருத்துவ அறுவைச் சிகிச்சைப் பிரிவில் டட்டம் முடித்துவிட்டு, மேல் படிப்புக்காக கடந்த மாதம்தான் அமெரிக்கா வந்திருந்தார். வரும் செவ்வாய்க்கிழமை (செப். 5) அல்லது புதன்கிழமை (செப். 6) அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்தது.
முன்னதாக, வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த மற்றொரு மாணவரான நிகில் பாட்டியாவின் உடல், அவரது தாயார் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் ஹூஸ்டன் நகரில் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
நிகில் பாட்டியாவின் அஸ்தியுடன் அவரது தாயார் திங்கள்கிழமை இந்தியா திரும்புவதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த நிகில் பாட்டியா, டெக்ஸாஸ் ஏஎம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காகப் படித்து வந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.