இன்றைய தேதியில் இணையம் அத்தியாவசியத் தேவை ஆகிவிட்டது. இந்த டிஜிட்டல் யுகத்தில் பலதரப்பட்ட பணிகள் இணையத்தில் செய்து முடிக்கப்படுகிறது.
ஒருவர் தான் இருக்கும் இடத்தில் இருந்தே தனது பணியைச் செய்து முடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. உலகம் இனி நம் உள்ளங்கையில் என்பது மெய்ப்படும் விதமாக ஸ்மார்ட்ஃபோன்களின் வரவு உள்ளது.
இதன்மூலம் நமக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
இத்தனைக்கும் காரணமாக இருப்பது இணையத்தில் உள்ள பிரபல தேடுதல் இயங்குதளமான கூகுள்.
ஆம், தனது பெயருக்கு ஏற்றது போன்று இதில் அனைத்து தகவல்களையும் மிகச் சுலபத்தில் சேகரிக்க முடியும். கூகுள் என்பது எண்ணற்ற என்று பொருள்.
அதுபோல, இந்த இயங்குதளத்தின் இயக்கம் உள்ளது. கூகுள் நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியாக நமது சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உள்ளார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரபல ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்ட லாரி பேஜ் மற்றும் செர்கி ப்ரின் ஆகிய இரண்டு மாணவர்கள் தான் கூகுள் இயங்குதளத்தை முதலில் வடிவமைத்தனர்.
சரியாக 1998-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இது, பலதரப்பட்ட தகவல்களையும் தேடுதல் இயங்குதளத்தின் மூலம் உலகின் எந்தத் மூலையில் இருந்தும் சுலபத்தில் சேகரிக்கும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கூகுள் தேடுதல் இயங்குதளம் வடிவமைக்கப்பட்டு இன்றுடன் சரியாக தனது 19-ஆவது பிறந்ததினத்தை கொண்டாடுகிறது. தினமும் உள்ள சிறப்புகளை டூடுல் போட்டு சிறப்பித்து வந்த கூகுள், இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு விடியோ டூடுல் ஒன்றை வெளியிட்டது.
அதில், சமீபகாலங்களில் நடந்த சிறப்புமிக்க சம்பவங்களின் தொகுப்பு தொடர்பான விளையாட்டுக்களை ஏற்படுத்தியுள்ளது.