கான்பெரா: ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமரின் தலையில் முட்டிய இரவு விடுதி இசைக்கலைஞருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபோட். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி இரவு விடுதி ஒன்றில், இசைக் கலைஞரான அஸ்ட்ரோ லபே என்பவரால் தலையில் தலையால் மோதித் தாக்கப்பட்டார்.
ஹோபார்ட் நகரில் உள்ள அந்த இரவு விடுதியில் லபே மதுவருந்திக் கொண்டிருக்கும் பொழுது, அந்தப் பக்கமாக ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் நடந்து சென்றுள்ளார். அவரை பார்த்ததும் பின்தொடர்ந்து சென்ற லபே, அவரிடம் கைகுலுக்குவது போல் சென்று அவரை தனது தலையால் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தினை பற்றிக் கூறிய அபோட், தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும், தனது உதட்டில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். அத்துடன் அப்பொழுது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு பால் திருமணம் திருமணம் பற்றிய விவாதத்தின் காரணமாக தான் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். ஆனால் அதற்கும் தான் தாக்கியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விசாரணையில் லபே மறுத்தார். எனவே இது மதுபோதையில் நிகழ்ந்த தவறு என்று தெரிவானது.
இது தொடர்பான வழக்கு ஹோபார்ட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.அந்த வழக்கில் நீதிபதி மைக்கேல் டேலி தீர்ப்பளித்தார். அதில் அவர் இந்த தாக்குதல் சம்பவமானது எதிர்பாரதது; சந்தர்ப்ப வசத்தில் நிகழ்ந்தது மற்றும் கோழைத்தனமானது. இதனால் லபேக்கு ஆறு மாத சிறை தண்டனை அளிக்கப்படுகிறது. அத்துடன் மது மற்றும் போதை மறுவாழ்வு சிகிச்சைகளையும் எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிடு வதாக தெரிவித்தார்.
ஆனாலும் இரண்டு மாதங்களில் நன்னடத்தைக்கான உத்தரவாதத்துடன் லபே பரோலில் விடுதலை ஆக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.