புதுதில்லி: இந்திய கடற்படை சார்பில் வரும் 6-ம் தேதி முதல் 8 நாட்கள் இந்திய பெருங்கடலில் நடைபெற உள்ள கூட்டு கடற்பயிற்சியில் பங்குபெற மாலத்தீவு மறுத்து விட்டது.
மாலத்தீவில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின் காரணமாக அங்கு அரசியல் ஸ்திரமற்ற சூழல் நிலவுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று பல்வேறு உலக நாடுகளும் கருத்து தெரிவித்திருந்தன.
அத்துடன் மாலத்தீவில் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக நெருக்கடி நிலையை அந்நாட்டு அரசு நீட்டித்திருப்பதாக இந்தியா கருத்து தெரிவித்தது. இதற்கு மாலத்தீவு கண்டனம் தெரிவித்தது. மேலும் அதற்கு எதிர்வினையாக, மாலத்தீவின் அரசியல் நெருக்கடி நிலவரங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடக்கூடாது என மாலத்தீவு வெளியுறவு துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் இந்திய பெருங்கடல் கடல்வழிப் பாதையில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கவும், அந்த பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கவும் இந்திய கடற்படை சார்பில் வரும் 6-ம் தேதி முதல் 8 நாட்கள் அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டு கடற்பயிற்சி நடைபெற உள்ளது.
இந்த மெகா கடற்பயிற்சியில் அப்பிராந்தியத்தில் உள்ள 16-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன. இதில் பங்குபெற மாலத்தீவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் இந்த அழைப்பை மாலத்தீவு நிராகரித்துவிட்டதாகவும், அதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பா இன்று தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.