காபூல் தாக்குதல்: மோடியுடன் பேசிய ஆப்கான் அதிபர், பாகிஸ்தான் பிரதமருடன் பேச மறுப்பு
காபூலில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து, ஆஃப்கன் அதிபர் அஷ்ரஃப் கனியை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தனது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார்.
காபூல்: காபூலில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து, ஆஃப்கன் அதிபர் அஷ்ரஃப் கனியை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தனது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார்.
காபூலில் நடந்த மிகப் பயங்கர குண்டு வெடிப்புத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
பிரதமர் மோடி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, காபூலில் நடைபெற்ற மனிதத் தன்மையற்ற பயங்கரவாத அமைப்பினால் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டார் என்று அஷ்ரஃப் கனி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
Advertisement
இது ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது. ஆனால், இந்த டிவிட்டர் பதிவுக்குப் பிறகு தனது கண்டனத்தைத் தெரிவிக்க பாகிஸ்தான் பிரதமரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை ஏற்க கனி மறுத்துவிட்டதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
தங்களது அண்டை நாட்டை சரணாலயமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத இயக்கங்களை ஒழிக்கத் தேவையான நடவடிக்கை குறித்து இந்தியப் பிரதமரிடம் பேசினேன். இந்தியா எப்போதுமே எங்களது சிறந்த தோழமை நாடாக இருக்கிறது. எங்களது வலி மற்றும் ஆற்றாமையை இந்தியாவோடு பகிர்ந்து கொண்டுள்ளோம் என்றும் அஷ்ரஃப் கனி டிவிட்டரில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை ஏற்க மறுத்த அஷ்ரஃப் கனி, தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளை இஸ்லாமாபாத்துக்கு அனுப்பி, சமீபத்தில் காபூலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமாக அமைந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான் அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.