முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: இடைக்கால அரசு பொறுப்பேற்பு

பாகிஸ்தானில் பொதுத் தேர்தலுக்குப் பிறகு அடுத்த அரசு அமையும் வரை செயல்படவுள்ள இடைக்கால அரசு, செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
இடைக்கால அரசின் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் அதிபர் மம்னூன் ஹுசைன் (நடுவே).
பகிர்:

பாகிஸ்தானில் பொதுத் தேர்தலுக்குப் பிறகு அடுத்த அரசு அமையும் வரை செயல்படவுள்ள இடைக்கால அரசு, செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானில் நாஸிருல் முல்க் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அமைச்சரவை, தலைநகர் இஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டது.
இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில், ஷம்ஷாத் அக்தார், ரோஷன் குர்ஷித், அலி ஜாஃபர், அப்துல்லா ஹுசைன் ஹாரூன், ஆஸம் கான், முகமது யூசஃப் ஷேக் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு அதிபர் மன்னூன் ஹுசைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இடைக்கால பிரதமர் நாஸிருல் முல்க் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையில், அப்துல்லா ஹுசைன் ஹாரூணுக்கு வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கான பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
பாகிஸ்தானில் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைமையிலான அரசின் பதவிக் காலம் கடந்த மாதத்துடன் முடிந்தது.
அதனைத் தொடர்ந்து, இந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சி அடுத்த ஆட்சியை அமைக்கும்.
அதுவரையிலான இடைக்கால அரசுக்கு பிரதமராக, நீண்ட விவாதத்துக்குப் பிறகு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நாஸிருல் முல்க் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவரது தலைமையிலான இடைக்கால அரசு தற்போது பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →