26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு: நவாஸ் ஷெரீஃப் ஒப்புதல்
மும்பையில் நடைபெற்ற 26/11 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதாக முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீஃப் சனிக்கிழமை ஒப்புக்கொண்டுள்ளார்.
மும்பையில் 26/11 நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பி வைத்ததாக அந்நாட்டு முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீஃப், சனிக்கிழமை ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி மும்பையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா தாக்குதல் நடத்தியது. இதில் 166 பேர் கொல்லப்பட்டனர், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதில் உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப், கடந்த 2012-ஆம் ஆண்டு புணேவில் அமைந்துள்ள யெரவாடா மத்திய சிறையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜமாத்-உத்-தவாத் அமைப்பின் தலைவன் ஹஃபீஸ் சயீது முளையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
Advertisement
Advertisement
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹஃபீஸ் சயீது, பாகிஸ்தானில் அரசியல் கட்சி நடத்தி வருகிறான். மேலும் இந்த வழக்கு தொடர்பாக அவனை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு மத்திய அரசு பலமுறை கோரிக்கை வைத்தும் அதை பாகிஸ்தான் அரசு நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை பாகிஸ்தான் நீதிமன்றத்தில் இன்னும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீஃப் அந்நாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது. அவர்களை போராளிகள் என்று அழைக்கும் நாம், எல்லை தாண்டிச் சென்று மும்பையில் 150-க்கும் மேற்பட்டவர்களை கொல்ல அனுமதிக்க வேண்டுமா? இதற்கான விளக்கத்தை எனக்கு அளியுங்கள். இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்னும் ஏன் முடிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.